சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிய 6 “ஜெகஜ்ஜால” சிறுவர்கள்….
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம் சாலையில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பிய 6 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 34 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவு சாப்பாடு முடிந்ததும் அனைத்து சிறுவர்களும் அவர்களது அறையில் தூங்கச் சென்றனர். நள்ளிரவு 11 மணி அளவில் ஒரு அறையில் இருந்த 6 சிறுவர்கள் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கம்பியால் சுவற்றின் ஜன்னலை உடைத்தனர்.
அதன் வழியாக புகுந்து வெளியே வந்த ஒருவன் அருகில் கிடந்த மர டேபிளை துண்டாக்கி அதன் கட்டையால் அறை பூட்டை உடைத்து உள்ளே இருந்த மேலும் 5 பேரை விடுவித்தான்.
பின்னர் அவர்கள் 6 பேரும் சீர்திருத்த பள்ளியை சுற்றி உள்ள சுமார் 30 அடி உயர சுவரை அருகில் இருந்த மரத்தில் ஏறி குதித்து தப்பிச் சென்று விட்டனர்.
நள்ளிரவில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அறை ஜன்னலை உடைத்து 6 சிறுவர்கள் தப்பி ஓடி இருப்பது தெரிந்தது. இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியின் பின்புறம் உள்ள கொலவாய் ஏரி வழியாக நீந்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அருகில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளதால் இரவே அவர்கள் வேறு எங்கேயும் தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தப்பி ஓடியவர்களில் ஒருவன் தேனியை சேர்ந்த மருது பாண்டியன் என்பதும் மற்றவர்கள் திருச்சி, மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் சீர்திருத்த பள்ளியில் இருந்த 9 பேர் காவலாளிகள் 2 பேரை தாக்கி தப்பிச்சென்று இருந்தனர். அவர்களில் 2 பேர் இன்னும் சிக்கவில்லை.
தற்போது மீண்டும் சிறுவர்கள் தப்பிச் சென்று உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சீர்திருத்த பள்ளி அதிகாரி ராமநாதனிடம் கேட்டபோது, தப்பி ஓடிய 6 சிறுவர்களும் அவர்களது உறவினர்கள் வீடு அல்லது சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்றும், அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.