மணப்பாறையில் பரவும் விஷக்காய்ச்சல்: குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பரவி வரும் விஷ காய்ச்சலுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மணப்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மணப்பாறை தெற்கு லெட்சுமி புரத்தைச் சேர்ந்த வைஷ்ணவி (வயது 7) என்ற சிறுமியும், சுண்டக் காம்பட்டியைச் சேர்ந்த கரிசா (2)அபிராமி (3) ஆகிய மூன்று குழந்தைகளுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியதை அடுத்து அவ்வபோது மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அங்காங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே கருங்குளத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்ற பெண் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தநிலையில் மணப்பாறை சேது ரெத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன் என்பவரின் மகள் மஹாலெட்சுமி வயது 9 என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று மாலை உயிரிழந்தாள்.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்த மஹாலெட்சுமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள். 3 நாட்கள் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மஹாலெட்சுமி உயிரிழந்தாள்.
மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் ஏழை, எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நோயினால் பாதிக்கப்படும் நிலையில் அவர்களின் சிரமத்தை குறைப்பதற்காகத்தான் மணப்பாறையில் இருந்த அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு கோவில்பட்டி சாலையில் இருந்து விராலிமலை சாலைக்கு மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குரிய எந்த மருத்துவ வசதிகளும் கிடையாது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை 3 நாட்கள் உள்நோயாளிகளாக அனுமதித்து பின்னர் காப்பாற்ற முடியாத நிலை வந்ததும் உடனே திருச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறும் நிலை இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் பலியான பின்னரே நடவடிக்கை எடுக்கின்றனரே தவிர அதற்கு முன்னதாகவே கிராமப்பகுதிகளுக்கு சென்று காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படாதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுப்பது கிடையாது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏழை எளிய குடும்பத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் பலியாவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்களும், பாதிக்கப்பட்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications