செங்கல்பட்டில் கோரவிபத்து.. 6 பேர் நசுங்கி உயிரிழப்பு..திருவண்ணாமலை தீபவிழாவில் பங்கேற்றவர்கள் பலி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய சரக்கு வாகனத்தில் பயணித்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழா சென்றுவிட்டு வீடு டாடா ஏஸ் வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து எப்படி நடந்தது? காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னை,திருவள்ளூர்,காஞ்சி செங்கல்பட்டு..மழையை எதிர்கொள்ள தயாராகுங்கள் மக்களே!
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் டாடா ஏஸ் (சரக்கு வாகனம்) வாகனம் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர் உள்பட 11 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் வாகனம் சென்றது. அப்போது அவர்கள் சென்ற வாகனம் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி நின்றது.
6 பேர் பலி
இந்த வேளையில் பின்னால் வந்த இன்னொரு லாரி டாடா ஏஸ் வாகனம் மீது மோதியது. இதனால் இருலாரிகளுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அதில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள்.
சென்னையை சேர்ந்தவர்கள்
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஞானமணி நகரை சேர்ந்த சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சந்திரசேகர்( 70), தாமோதரன் (28), சசிகுமார் ( 35 ), சேகர் (55), ஏழுமலை (65), கோகுல் (33) ஆறு பேரும் உயிரிழந்ததும், ராமமூர்த்தி ( 35), சதீஷ்குமார் ( 27), ரவி ( 26), சேகர் ( 37) ,அய்யனார் ( 34), ஆகியோர் அடைந்ததும் தெரியவந்தது.
தீபவிழா சென்று திரும்பியபோது விபத்து
மேலும் அவர்கள் திருவண்ணமலை கார்த்திகை தீப திருவிழாவை காண நேற்று புறப்பட்டு சென்றனர். நேற்று மாலையில் தீபத்திருவிழாவை பார்த்துவிட்டு அவர்கள் வீடு திரும்பியபோது விபத்து நடந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உடல்களை போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு படுகாயமடைந்த 5 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரணம் அறிவிப்பு
இந்நிலையில் தான் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நிவாரணம் அறிவித்தார். அதன்படி விபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர் பலியான நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமெனவும், படுகாயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.