தருமபுரியில் அன்புமணிக்கு எதிராக களம் இறங்கிய அதிமுக எம்.பிக்கள்! 9 கிராமங்களை தத்தெடுத்து அதிரடி!
சென்னை: பிரதமர் மோடியின் எம்.பிக்கள் கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தை பாமகவுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியுள்ளது அதிமுக. பாமக வெற்றி பெற்ற தருமபுரி தொகுதியில் 9 அதிமுக எம்.பிக்கள் ஆளுக்கு ஒரு கிராமங்களை தத்தெடுத்திருப்பது பாமகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள் ஆளுக்கு ஒரு கிராமத்தை தத்தெடுத்து முழு அடிப்படை வசதிகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என்பது பிரதமர் மோடியின் திட்டம்.
இத்திட்டத்தை ஏற்று அனைத்து அரசியல் கட்சி எம்.பிக்களும் கிராமம் ஒன்றை தேர்ந்தெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இதை அதிமுக அரசியல் ஆயுதமாக கையில் எடுத்துள்ளது.
தமிழகத்தில் 37 அதிமுக எம்.பிக்களும் தங்களது தொகுதிகளில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க அதிமுக மேலிடம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவின் 11 ராஜ்யசபா எம்.பிக்களுக்கு அதிமுக மேலிடம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதாவது தருமபுரி மாவட்டத்தில் அதிமுகவின் 11 ராஜ்யசபா எம்.பிக்களும் ஒவ்வொரு கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனடிப்படையில் மைத்ரேயன் (பாலவாடி), சசிகலாபுஷ்பா (பதுப்பட்டி), செல்வராஜ்(பசுவாபிரம்), நவநீதகிருஷ்ணன் (சின்னாங்குப்பம்), லட்சுமணன் (அளேதருமபுரி), அர்ஜூனன் (அரகாசன அள்ளி), ரபிபெர்னார்ட் (கெண்டென அள்ளி), விஜிலா சத்தியானந்த் (கோணங்கி நாயக்கன் அள்ளி), இரத்தினவேல் (அண்ணாலை அள்ளி ) என 9 அ.தி.மு.க. எம்.பி.க்கள் தருமபுரி மாவட்டத்தில் கிராமங்களைத் தத்தெடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
பிரதமரின் கிராமங்கள் தத்தெடுப்புத் திட்டத்தையே அரசியல் ஆயுதமாக அதிமுக கையில் எடுத்திருப்பது பாமகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.