பெற்றோர்களே கவனம்.. அதீத வெப்பத்தால் குலதெய்வ கோயிலுக்கு சென்ற சிறுவன் பலி.. ராணிப்பேட்டையில் பரபர
ராணிப்பேட்டை: குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த குடும்பத்துடன் சென்ற போது, 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை வெயில் இப்போது உச்சத்தில் இருக்கிறது. வழக்கமாக மே மாதம் தான கோடை வெப்பம் உச்சம் தொடும் என்ற போதும் இந்த ஆண்டு பிப். மாதமே முதலே வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

வெப்பம்: இந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவுகிறது. இந்த ஓவர் வெப்பத்தால் சில மோசமான சம்பவங்களும் கூட நடந்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி பகுதியில் உள்ள டி.சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43).. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெண்ணிலா (40) என்ற மனைவியும் அர்ஷன் (14), பரத் (12) என இரண்டு மகன்களும் உள்ளனர்.
குலதெய்வ கோயில்: இவர்களின் குலதெய்வ கோயில் பக்கத்துக் கிராமமான நத்தம் பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ளது. அங்குள்ள மூங்கில் வாழி அம்மன் கோவில் தான் இவர்களின் குல தெய்வ கோயிலாகும். இந்தச் சூழலில் நேர்த்திக்கடன் செலுத்த சத்யா தனது குடும்பத்தினரைக் குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு இவர்கள் குடும்பத்துடன் நடந்தே சென்றுள்ளனர்.
அப்போது அதீத வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் மயங்கி விழுந்து உள்ளார். இதையடுத்து பதறிய சத்யா குடும்பத்தினர் அர்ஷனை எழுப்ப முயன்றுள்ளனர். இருப்பினும், எவ்வளவு முயன்றும் அர்ஷனை எழுப்ப முடியவில்லை. இதையடுத்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மயங்கி விழுந்து உயிரிழப்பு: அங்கு அர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அர்ஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.. வெயிலின் தாக்கத்தால் அந்த சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரத்தினகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தக் குலதெய்வ கோவிலுக்குச் சென்ற 14 வயது சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோடை வெப்பம்: சமீப நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. பல பகுதிகளில் வெப்ப அலையும் கூட வீசுகிறது, இதனால் மதிய நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். கோடைக் காலத்தில் கவனமாக இருக்கும்படி தமிழக முதல்வரும் கூட அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றே வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் மே 1ஆம் தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications