தலைக்கேறிய சொத்து வெறி.. தந்தையின் கண்களை கைகளாலேயே நோண்டிய மகன்.. பெங்களூரில் பயங்கரம்!
பெங்களூரில் தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க மறுத்த தந்தையின் கண்களை வெறும் கைகளாலேயே நோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: பெங்களூரில் தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க மறுத்த தந்தையின் கண்களை மகன் வெறும் கைகளாலேயே நோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் ஜெபி நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வர். 65 வயதான இவர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
இவருக்கு 40 வயதில் அபிஷேக் சேட்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பரமேஷ்வரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்தார்.
மறுத்த தந்தை
இதைத்தொடர்ந்து ஜெபி நகரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி தந்தையை மகன் அபிஷேக் சேட்டன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் தனது மகளுக்கும் பிரித்து தர வேண்டும் கூறியுள்ளார் பரமேஷ்வர்.
கண்ணை பிடுங்கிய மகன்
இதற்கு உடன்படாத அபிஷேக் சேட்டன், தனது தந்தையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அபிஷேக் தனது தந்தை என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தியதோடு அவரது ஒரு கண்ணை வெறும் கைகளாலேயே தோண்டி எடுத்தார்.
ஓடி வந்த தந்தை
மேலும் அவரை கொலை செய்யவும் முயன்றார் அபிஷேக். இதனால் வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் துடித்த பரமேஷ்வர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
போதைக்கு அடிமை
இதைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் அபிஷேக்கை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி அபிஷேக் போதைக்கு அடிமையானவர் என்றும் எந்த வருமானமும் இன்றி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
சொத்துக்காக பெற்ற தந்தையின் கண்களை தோண்டிய மகன் அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.