ராமநாதபுரம்: அமைதிகாத்த அன்வர்ராஜாவைத் தேடி வந்த லோக்சபா வேட்பாளர் வாய்ப்பு!

ராமநாதபுரம், பனைக்குளத்தை சொந்த ஊராகக் கொண்ட அன்வர் ராஜாவின் தந்தை பெயர் அப்துல் முத்தலிபு.
தற்போது 65 வயதாகும் அன்வர்ராஜாவின் மனைவி பெயர் தாஜிதா பேகம். இவர்களுக்கு ஜாகீர்ஹூசேன் (39), நாசர்அலி (33), முகம்மது கானு ராஜா (27) என மூன்று மகன்களும், ராபியத்துல் அதபியா (30), கலிதா பேகம் (21) என இரண்டு மகள்களும் உள்ளனர்.
பி.எஸ்.சி.,எம்.ஏ. படித்தவரான அன்வர் ராஜா, 1986- மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராகவும், 1987ம் ஆண்டு கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் ஆனார். அதனைத் தொடர்ந்து 1996ல் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும், 1998ம் ஆண்டு மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார். கடந்த 1999ம் ஆண்டு அதிமுக அமைப்புச் செயலரான அன்வர் ராஜா, 2009ம் ஆண்டு முதல் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநிலச் செயலராக உள்ளார்.
இதற்கிடையே 2001 முதல் 2006 வரையிலான முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் அன்வர் ராஜா பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நழுவிப் போன ராஜ்யசபா வாய்ப்பு
கடந்த ராஜ்யசபா தேர்தலில் அன்வர்ராஜாவுக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. அவரும் அதை மலையென நம்பியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. லோக்சபா தேர்தலிலும் கூட ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பேர் பட்டியலில் அன்வர்ராஜாவின் பெயர் இல்லையாம். ஆனாலும் அமைதி காத்த அன்வர்ராஜாவை தேடி வந்திருக்கிறது லோக்சபா தேர்தல் வேட்பாளர் வாய்ப்பு என்கின்றனர் அதிமுகவினர்.
பொறுமையாக இருந்ததால் அன்வராஜ் ராஜாவுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.. அறுவடையாகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications