காதலித்து ஏமாற்றிய வழக்கு: ஜாமீன் கேட்ட வாலிபருக்கு நீதிபதி முன்னிலையில் திருமணம்
விழுப்புரம்: காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வாலிபருக்கு சம்பந்தப்பட்ட பெண்ணுடன் நீதிபதி முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த கருந்தலாக்குறிச்சி கிரா மத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சக்திவேல் (வயது 22), அதே ஊரைச் சேர்ந்தவர் கலியன் மகள் கலைச் செல்வி (வயது 20) என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். சக்திவேல் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கலைச்செல்வியிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இந்நிலையில், திடீரென கலைச்செல்வியை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் சக்திவேல். மேலும், காதல் விவகாரத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இது குறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேஸ்வரி, சக்திவேல் அவரது தாய் தங்காள், சித்தப்பா அருணாசலம், சகோதரர் சரத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சக்திவேலுக்கு ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பிரச்சினையை கேள்விப்பட்ட விழுப்புரம் மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, மாற்று தீர்வு மையத்தின் மூலம் பேசி தீர்க்க முடிவு செய்து சக்திவேல் குடும்பத்தினர் மற்றும் கலைச்செல்வி குடும்பத்தினர் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் இரு குடும்பத்தாரும் சுமுகமடைந்து திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்த காதல் ஜோடிகளின் திருமணம் நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி வினாயகர் கோவிலில் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் துர்க்கை அம்மன் சன்னதியில் நடந்தது.
பீரோ, கட்டில், பாத்திரங்கள் என இக்கல்யாணத்திற்கு தேவையான சீர்வரிசைகளை நீதிபதியும், விழுப்புரத்தில் உள்ள மனித உரிமை அமைப்பும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் முதன்மை குற்றவியல் நீதிபதி வெற்றிசெல்வி, மாவட்ட அரசு வக்கீல் பொன்சிவா, மனித உரிமை அமைப்பை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.