படுவேகமாக நிரம்பும் உடுமலை அமராவதி அணை.. உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர்: தமிழ்நாடு முழுக்க கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருவதால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதற்கிடையே மழையால் உடுமலை அமராவதி அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளதால் அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

அமராவதி அணை: இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் உள்ளிட்ட நீர்ப்பிடி பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நீர் வரத்து அதிகரிப்பதால் பல்வேறு அணைகளில் இருந்தும் நீர் திறந்துவிடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது தான் அமராவதி அணை.. திருமூர்த்தி அணையின் தெற்கே அமராவதி ஆற்றின் குறுக்கே 1957ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை மொத்த கொள்ளளவு 90 அடியாகும்.
தென்மேற்கு பருவ மழை இப்போது தீவிரமடைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வருகிறது. இந்த அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அமராவதி அணைக்கு வரும் நீர் வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 90 அடி கொண்ட அணை இப்போது 85 அடியை எட்டி இருக்கிறது.
நீர் வரத்து அதிகரிப்பு: இப்போதும் கூட அணைக்கு வினாடிக்கு 6400 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே அளவில் நீர் வரத்து இருந்தால் விரைவில் அணை தனது மொத்த கொள்ளளவான 90 அடியை எட்ட வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணி நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..
எச்சரிக்கை: இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் அமராவதி மற்றும் உடுமலை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை: இந்த பகுதியில் வரும் காலத்தில் மழை தொடருமே என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிகக் கன முதல் அதி கனமழையும்: கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications