மதுரையில் காதலை ஏற்க மறுத்து தீ வைக்கப்பட்ட மாணவி சித்ராதேவி சிகிச்சை பலனின்றி பலி
மதுரையில் ஒரு தலைகாதலை ஏற்க மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Recommended Video
மதுரை: மதுரையில் காதலிக்க மறுத்ததால் இளைஞரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சித்ராதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் மணிப்பாண்டி - பேச்சியம்மாள் தம்பதி. இவர்களது மகள் சித்ராதேவி (14 ). திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சித்ராதேவி பள்ளிக்கு சென்று வரும் நேரங்களில் அவரது உறவினரான தனியார் மில் ஊழியர் பாலமுருகன் (25) அவரை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறி கடந்த ஓராண்டாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
இதுகுறித்து அறிந்த சித்ராதேவியின் பெற்றோர் பாலமுருகனை கண்டித்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனாலும் பாலமுருகனின் தொல்லை தொடர்ந்ததால் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த பாலமுருகன்
அதன்பேரில் போலீஸார் பாலமுருகனை குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி கைது செய்தனர். இதில் சிறையில் அடைக்கப்பட்ட பாலமுருகன் அண்மையில் ஜாமீனில் வந்துள்ளார்.
தப்பி ஓட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் கடந்த 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்த சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில்
இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் சித்ராதேவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாலமுருகன் கைது
அவருக்கு இடுப்பு, மார்பு, முகம் ஆகியவற்றில் தீக்காயங்கள் இருப்பதாகவும், 60 சதவீதம் தீக்காயங்கள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சித்ராதேவியின் தந்தை மணிப்பாண்டி அளித்தப் புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலமுருகனை கைது செய்தனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சித்ராதேவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.