ஆட்டுக்கு சொந்தம் கொண்டாடிய நாகராஜ், பெரியசாமி... பஞ்சாயத்தைத் தீர்த்து வைத்த டாக்டர் அண்ணாதுரை
கோவை: கோவையில் ஒரு ஆட்டுக்கு இருவர் உரிமை கொண்டாடிய புகாரில் கால்நடை மருத்துவர் மூலம் போலீசார் தீர்வு கண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ஆனைமலை அருகிலுள்ள சுப்பேகவுண்டன்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் வளர்த்து வந்த வெள்ளாடு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது.
இந்நிலையில் நாகராஜ் நேற்று தனது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியசாமி என்பவரது தோட்டத்தில் தனது வெள்ளாட்டை பார்த்துள்ளார். இதையடுத்து பெரியசாமியிடம் இது தான் வளர்த்த ஆடு என்றும், மூன்று மாதம் முன்பாக காணமல் போனதாகவும், இந்த ஆட்டை தன்னிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பெரியசாமி "இது உன்னுடைய ஆடு இல்லை. என்னுடைய ஆடு" என தெரிவித்தார். இதுகுறித்து நாகராஜ் ஆனைமலை போலீஸில் புகார் தெரிவித்தார்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆட்டுக்கு இருவரும் சொந்தம் கொண்டாடினர். இதனால் குழப்பமடைந்த போலீஸார், ஆட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை கண்டறிய இருவரிடமும் ஆட்டின் வயதை கேட்டபோது, பெரியசாமி ஒன்றரை வயது என்றும், நாகராஜ் இரண்டரை வயது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வேட்டைக்காரன்புதூர் அரசு கால்நடை மருத்துவர் அண்ணாத்துரையை வரவழைத்த போலீஸார் ஆட்டின் வயதை கண்டறிய கேட்டுக்கொண்டனர். கால்நடை மருத்துவர் ஆய்வு செய்ததில், ஆட்டுக்கு இரண்டரை வயது என்பது உறுதியானது. இதையடுத்து நாகராஜிடம் ஆட்டை ஒப்படைத்து போலீஸார் பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.