கள்ளக்காதலுக்கு இடையூறு... 5 வயது மகனுக்கு சூடுவைத்து சித்ரவதை செய்த தாய்... திருப்பூரில் கொடூரம்
திருப்பூரில் கள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததாக பெற்ற மகனை சூடுவைத்தும், கடுமையாக தாக்கியும் கொடுமை செய்த தாயும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது மகனுக்கு சூடு வைத்தும், கடுமையாக தாக்கியும் கொடுமை செய்த திருப்பூர் கள்ளக்காதல் ஜோடியை போலீஸார் கைது செய்தனர்.
குண்டடம் அருகே மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மேட்டுக் கடையில் பஞ்சர் கடை வைத்துள்ளார். அவரது கடை முன்பு 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டிருந்தான்.
அவனிடம் சக்திவேல் விசாரித்தார். அப்போது தனது தாயும், அவருடன் தங்கியுள்ள ஒருவரும் சேர்ந்து தனக்கு சூடுவைத்தும், கடுமையாக தாக்கியும், உணவு கொடுக்காமலும் கொடுமை செய்வதாக கூறினான்.

நேரில் சென்று விசாரணை
பின்னர் அந்த சிறுவனை குண்டடம் காவல் நிலையத்துக்கு சக்திவேல் அழைத்து சென்றார். இதையடுத்து சிறுவனிடம் வீட்டு முகவரியின் அடையாளங்களை பெற்று கொண்ட போலீஸார் அந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கள்ளக்காதலனுடன் வீட்டில்...
போலீஸார் சென்ற அந்த வீட்டில் 30 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவரும், அவருடன் இளைஞர் ஒருவரும் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் பானுப்பிரியா (30). அந்த இளைஞரின் பெயர் ராஜேஷ் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கொடுமைப்படுத்திய சிறுவன் இர்ஃபான் (5) என்றும் இவன் பானுப்பிரியாவின் மகன் என்றும் தெரியவந்தது.

உண்மைகள் அம்பலம்
பானுப்பிரியாவின் சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு சந்தோஷ் (9) , மதுமிதா(7), இர்ஃபான் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்த பிறகு, அப்பாஸ் , பானுப்பிரியாவைவிட்டு பிரிந்து சென்றது தெரியவந்தது.

கள்ளக்காதலாக மாறியது
குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பானுப்பிரியாவுக்கு திருக்கானூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஷுடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து சந்தோஷ் மற்றும் மதுமிதாவை அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் பானுப்பிரியா சேர்த்துவிட்டார். பின்னர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு இர்ஃபானுடன் இருவரும் குடியேறினர்.

மகன் இடையூறு
மேட்டுக்கடையில் உள்ள ஒரு அறை கொண்ட வீடு என்பதால் தங்களின் உல்லாச வாழ்க்கைக்கு மகன் இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் அந்த சிறுவனுக்கு சூடு வைத்தும், கடுமையாக தாக்கியும் சித்ரவதை செய்துள்ளார் பானுப்பிரியா. இவர்கள் உல்லாசமாக இருக்கும் நேரத்தில் சிறுவனுக்கு சாப்பாடு கூட வழங்காமல் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு இவர்கள் பிஸியாக இருந்துள்ளனர்.

போலீஸார்
சம்பவம் நடைபெற்ற தினத்தின்போதும் சிறுவனை வெளியே தள்ளி தாழிட்டு கொண்டனர். இதனால் சிறுவன் அழுது கொண்டே மேட்டுக்கடை பேருந்து நிலையத்துக்கு வந்து அங்குள்ள பஞ்சர் கடையில் உதவியை நாடியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பானுப்பிரியாவையும், ராஜேஷையும் கைது செய்தனர். கள்ளக்காதலுக்காக பெற்ற மகன் என்றும் பாராமல் தாய் இவ்வாறு நடந்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications