காதல் திருமண மோதல்.. ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் இளைஞருக்கு மான் கொம்பு குத்து.. பரபரப்பு!
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காதல் திருமணம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது மான்கொம்பால் ஒருவர் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு : ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் காதல்திருமணம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் முற்றியதில் எதிர் தரப்பினர் ஷானவாஸ் என்பவரை மான்கொம்பால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர் காதல் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அவர்கள் காவல்துறையிடம் அடைக்கலம் கேட்டிருந்தனர். இதனையடுத்து இரண்டு தரப்பினரையும் அழைத்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சமரச பேச்சு நடத்தும் முயற்சி நடந்துள்ளது.
அப்போது ஒரு தரப்பினர் இந்த காதல் திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. காவல்துறையினர் முன்னிலையிலேயே தரக்குறைவான வார்த்தைகளில் திட்டிக் கொண்டும் உள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் மான்கொம்பால் ஷானவாஸ் என்பவர் குத்தப்பட்டதாக தெரிகிறது. காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஷானவாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷானவாஸை தாக்கியவரை போலீசார் பிடித்து வைத்துள்ளனர்.