நெல்லை இரட்டை கொலை வழக்கு: ஆள்மாறி அப்பாவிகள் கொலையா?
நெல்லை: நெல்லை இரட்டை கொலையில் கூலிப்படையினர் தொடர்பு இருக்கலாம் என்றும், இதில் அப்பாவிகள் பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை டவுன் பாறையடியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் இரண்டு பேர் நேற்று முன்தினம் இரவு நெல்லை டவுனில் பொருட்கள் வாங்கி விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக டவுன் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் மாதவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்த கொலை பழிக்குபழியாக நடந்திருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
கொலையான சண்முகம், மாரியப்பன் ஆகியோர் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு யாரிடமும் எந்த முன்விரோதமும் இல்லை. வெட்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ராஜ்குமார் மீது சில ஆண்டுகளுக்கு முன் தனது தந்தையை வெட்டிக் கொன்ற வழக்கு இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலையாளிகள் அடையாளம் தெரியவில்லை. இதனால் இந்த இரட்டை கொலை ஆள்மாறாட்டத்தில் நடந்திருக்கலாம் என தெரிய வருகிறது.
இவர்கள் மொபெட்டில் பொருட்கள் வாங்கி விட்டு வரும்போது அங்கு பதுங்கி இருந்த கூலிப்படையினருக்கு யாரோ பைக்கில் வருவதாக தகவல்
தெரிவித்துள்ளனர். இதனால் பைக்கில் வருபவர்களை வெட்டுவதற்கு பதிலாக மொபட்டில் வந்தவர்களை கூலிப்படையினர் தவறுதலாக வெட்டியுள்ளனர். கூலிப்படையினர் குறி வைத்தவர்கள் வேறு வழியாக பாதை மாற்றி சென்றிருக்கின்றனர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலால் கொலையாளிகளை கைது செய்யும் வரை கொலை செய்யப்பட்டவர்களின் உடலை வாங்க மாட்டோம் என அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.