காதலியிடம் கெத்து காண்பிக்க... பைக் திருடிய இளைஞர்... லபக் என பிடித்த போலீஸார்!
நாகர்கோவிலில் காதலியை பார்ப்பதற்காக பைக் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video

நாகர்கோவில்: நாகர்கோவிலில் காதலியிடம் கெத்து காண்பிப்பதற்காக பைக் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில், ஆரல்வாய்மொழி பகுதிகளில் தொடர்ச்சியாக பைக்குகள் திருடப்பட்டு வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்ததை தொடர்ந்து, எஸ்.பி. துரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
சம்பவத்தன்று வடசேரி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த நெல்லை மாவட்டம், வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்ற கார்த்திக் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பைக் திருட்டு
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், வடசேரி காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு பைக் திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும் ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்பிட்டு பார்த்ததில், அதில் பதிவாகி இருந்த வாலிபர் கருத்தப்பாண்டி தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

கைது செய்த போலீஸார்
இதையடுத்து கருத்தப்பாண்டியை கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் 21 பைக்குகளை மீட்டனர். ஆரல்வாய்மொழி, கோட்டார், நேசமணிநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் கருத்தப்பாண்டி பைக் திருட்டில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

சிறையில் அடைப்பு
கைதான கருத்தப்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கருத்தப்பாண்டியுடன் மேலும் 3 பேர் சேர்ந்து நாகர்கோவில், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருடப்படும் பைக்கை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சில வாகன கன்சல்டிங் நிறுவனத்துக்கு கைமாற்றி விடுவார்கள். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நால்வரும் பங்கிட்டு கொள்வார்கள். ஒரு பைக் விற்பதன் மூலம் ஒரு நபருக்கு 5 ஆயிரம் வரை கிடைக்கும்.

திருட்டு காசில் காதலிக்கு செலவு
இந்த பணத்தை கொண்டு தனது காதலியின் ஆசைகளை கருத்தப்பாண்டி நிறைவேற்றி வந்துள்ளார். திருமணத்துக்கு முன் பெரிய வீடு கட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இவரின் காதலி, நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். காதலியை சந்திக்க பஸ்ஸில் வரும் கருத்தப்பாண்டி பின்னர், இங்கிருந்து பைக்கை திருடிவிட்டு சென்று விடுவார். சில சமயங்களில் திருட்டு பைக்கிலேயே தனது காதலியை நெல்லைக்கு அழைத்து செல்வாராம். இந்த சம்பவம் கல்லூரி பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications