ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு - கோவில்களில் அலைமோதிய பக்தர்கள்
சென்னை: ஆடிப்பூர விழாவையொட்டி சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் திரண்டு வழிபாடு நடத்தினார்கள். இதனால் அனைத்து அம்மன் கோவில்களிலும் பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பால்குடம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாதாள பொன்னியம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
ஆழ்வார்திருநகர் மேட்டுக்குப்பத்தில் உள்ள கடும்பாடி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி இன்று 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டன. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.
திருவேற்காடு கருமாரி
திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் ஆடிப்பூரத்தையொட்டி இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கில் பெண் பக்தர்கள் திரண்டதால் இன்று அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
வளையல்களால் அலங்காரம்
இன்று திருவேற்காடு கருமாரியம்மனுக்கு நவகலச அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு வளையல் அணிவித்து பூஜை நடக்கிறது. பெண் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றி பூஜை செய்யப்படும். பின்னர் பெண் பக்தர்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் ஆகியவை வழங்கப்படும்.
மாங்காடு காமாட்சி
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி இன்று பெண்கள் அதிக அளவில் திரண்டு சாமிதரிசனம் செய்தனர். அம்மனுக்கு சாற்றிய வளையல்கள் பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
மயிலை முண்டகக் கண்ணியம்மன்
இதேபோல் மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவில், பாரிமுனை காளி காம்பாள் கோவில், சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று பெண்கள் திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
வளைகாப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு புதன்கிழமை அம்மனுக்கு வளைகாப்பு சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நகரில் பல்வேறு இடங்களிலிருந்து திரளான மகளிர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து வந்து அம்மனை வழிபட்டனர். விழாவை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.