சென்னை விமான நிலைய டிரான்ஸ்பரில் குளறுபடி… 52 உயர் அதிகாரிகள் தூக்கியடிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான நிலைய மேலாளர்கள், பொறியாளர்கள், துணை பொது மேலாளர்கள் உள்பட 52 உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்து போன, வி.ஆர்.எஸ் பெற்று சென்றவர்களுக்கும் டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருப்பதுதான் வேதனையான விசயம்.
சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் மூத்த அதிகாரிகள் இங்கு பணியாற்றினால் தனியார் மயத்துக்கு எதிராக செயல்படுவார்கள் என்று கருதி முக்கிய அதிகாரிகளை வெவ்வேறு இடங்களுக்கு தூக்கியடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை நகரில் பணியாற்றிய அதிகாரிகளை மிக சிறிய விமான நிலையங்களுக்கு மாற்றியுள்ளனர். பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள ஜெய்சல்மார் விமான நிலையம், மியான்மர் எல்லை பகுதியில் உள்ள தேஜ் விமான நிலையம், நேபாள எல்லையில் உள்ள பாக்யாங் விமான நிலையம், லட்சத்தீவில் உள்ள அகத்தி விமான நிலையம் உள்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையம் பிறப்பித்து 15 நாள்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் யாரும் இன்னும் புதிய இடங்களுக்கு செல்லவில்லை.
இறந்தவர்களுக்கு டிரான்ஸ்பர்
முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களை சாதாரண அதிகாரிகளாக மாற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த உத்தரவில் பல குளறுபடிகள் உள்ளன. சென்னையில் உதவி பொது மேலாளராக பணியாற்றிய எழிலரசு என்பவர் கடந்த ஏப்ரலில் இறந்து விட்டார். அவருக்கும் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது.
அதேபோல் விருப்ப ஓய்வு பெற்ற தோக்ரா, சென் என்ற இரு உயர் அதிகாரிகள், கடந்த 2012, ஜூனில் திருவனந்தபுரம் மாற்றப்பட்டு அங்கு பணியாற்றி வரும் மேலாளருக்கும் இடமாற்றம் வந்துள்ளது.
தனியார்மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்தாண்டு 3 நாள் தொடர் போராட்டம் நடந்தது. அதில் முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளை பழிவாங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.