அதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று திடீர் ஆலோசனை.. ஓ.பி.எஸ் அணிக்கு தாவுவதை தடுக்க தினகரன் நடவடிக்கை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் திங்கட்கிழமையான இன்று சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், கட்சி துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஓ.பி.எஸ் அணி
ஆனால், அதிமுக மற்றொரு அணியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் குழு செயல்படுகிறது.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நிர்வாகிகள் செல்வதை தடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முதல் அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க தொடங்கியிருக்கிறார்.

நடவடிக்கை தீவிரம்
இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள டி.டி.வி.தினகரன் தரப்பு, நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிமுக மாவட்ட செயலாளர்களை இன்று சென்னைக்கு அவசரமாக அழைத்துள்ளது.

50 மாவட்ட செயலர்கள்
அதிமுக தனது நிர்வாக வசதிக்காக 50 மாவட்டங்களாக பிரித்து செயலர்களை நியமித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் இன்று கூட்டத்தில் பங்கேற்பர் என்று தெரிகிறது. ஆனால் இவர்கள், அழைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அவர்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ரகசிய கூட்டம்
இது ரகசிய கூட்டமாக இருக்கும். போயஸ் கார்டன் இல்லத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடக்கும். கூட்டத்தில், மாவட்ட வாரியாக உள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications