பற்றி எரிந்த கர்நாடக அரசுப் பேருந்து.. சென்னை அருகே பரபரப்பு.. அலறியடித்து இறங்கிய பயணிகள்
பெங்களூரில் இருந்து சென்னை வந்த கர்நாடக அரசு சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது, அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை: கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பூவிருந்தவல்லி அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் நடத்துனர் உட்பட 44 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் எந்தக் காயமும் இல்லை.
பேருந்து தீப்பற்றி எரிய காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பேருந்து குளிர்சாதன வசதி உடைய பேருந்து என்பதால் பேருந்தின் குளிர்சாதனத்தின் சுழலும் விசிறியில் தீப்பிடித்து பின்னர் மற்ற பகுதிகளுக்கு பரவியிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
காலையில் நடந்த விபத்து
காலையில் நடந்த இந்த விபத்தின் போது, பேருந்தில் தீ பற்றியதும் தொடங்கியதும் ஒட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தியாதல் பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு அலறியடித்துக்கொண்டு இறங்கி ஓடினர். பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
4 தீயணைப்பு வண்டிகள்
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளைப் பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஒரு மணி நேரத்தில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், பெரும்பாலான பயணிகளின் உடமைகள் பேருந்தின் உள்ளே மாட்டிக்கொண்டதால், முக்கிய ஆவணங்களை சில இழந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம்
ஆனால், உயிர் பிழைத்ததே பெரும்பாக்கியம் என்று சொன்ன பயணிகள் இன்னும் விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த விபத்து காரணமாக, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
6 மாதத்தில் இது 2வது முறை
கடந்த 6 மாதங்களில் இது போன்ற 2 ஏசி பேருந்துகள் எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இதனால், ஏசி பேருந்துகளில் பயணிக்க அச்சப்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஏசி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து அரசுகள் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.