நிலவேம்பு கசாயத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பதில் நியாயமில்லை... கமல் விளக்கம்!
நிலவேம்பு கசாயம் விநியோகிக்க வேண்டாம் என்று ரசிகர் மன்றத்தினருக்கு சொன்னதை தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : நிலவேம்பு கசாயத்தை ஏன் விநியோகிக்க வேண்டாம் என்று கூறினார் என நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவர் அனுமதியின்றி அளவின்றி மருந்தை கொடுக்க வேண்டாம் என்றே நிலவேம்பு கொடுக்க வேண்டாம் என சொன்னதாக கமல் கூறியுள்ளார்.
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும் என்று நடிகர் கமல்ஹாசன் இரண்டு தினங்களுக்கு முன்னர் டுவீட்டி இருந்தார். நடிகர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு சுகாதாரத்துறை செயலர், பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். நிலவேம்பு கசாயத்தால் எந்த பாதிப்பும் கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவர் ஒருவர் சென்னை மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் தனது கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
நற்பணி மன்றத்தால் நிலவேம்புக் கசாயத்தை விநியோகிக்க வேண்டாம் என்று மட்டுமே கேட்டுக் கொண்டேன். நிலவேம்புக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தியாய் பரப்பவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
சர்ச்சையாக இருக்கும் மருந்தை ஆர்வக் கோளாறில் அளவில்லாமல் கொடுப்பதை தவிர்க்கவே ட்வீட்டில் பதிவிட்டிருந்தேன். மருத்துவர் அறிவரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை விநியோகிப்பதை நான் விரும்பவில்லை.
அரசின் ஏற்பாடு, மருத்துவர் அறிவரையின்றி மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிப்படுவதை மட்டுமே நான் வேண்டாம் என்று சொன்னேன். மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான் என்றும் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.