சசிகலா ஆதரவுக்கு கடும் எதிர்ப்பு- முதல்வர் ஓபிஎஸ்-க்கு நடிகர் சரத்குமார் ஆதரவு?
தாம் பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்டதாக முதல்வர் ஓபிஎஸ் கூறியிருப்பது வருத்தம் தருகிறது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தாம் பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்டேன் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கூட்டணி கட்சியாக நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சமகவினர் எதிர்ப்பு
ஆனால் சரத்குமாரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இதற்கு சமத்துவ மக்கள் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

வேதனை தருகிறது
இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள கருத்து: தமிழகத்தின் பேரியக்கம், இந்திய அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுகவின் தற்போதைய நிலை வேதனையளிக்கிறது.

பாராட்டியிருந்தேன்...
புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் கட்டிக்காத்த பேரியிக்கம் பிளவு படாமல் இருப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை எனது முந்தைய அறிக்கையில் பாராட்டி இருந்தேன். முக்கியமாக திரு பன்னீர்செல்வம் அவர்களே முன்மொழிந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தேன்.

வருத்தம் தருகிறது
தான் பொறுப்பேற்ற முதல்நாள் முதல் சிறப்பாக செயல்பட்ட திரு பன்னீர்செல்வம் அவர்கள் கட்டாயப்படுத்தப் பட்டேன் என்று கூறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரின் உண்மைக்கும் உழைப்பிற்கு மதிப்பளித்து அவரின் எண்ணங்களுக்கு வழிவகுத்து, ஒன்றுபட்டு புரட்சித்தலைவி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்கான அனைத்து செயல்களையும் உடனடியாக செய்யவேண்டும்.
இவ்வாறு நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications