நெல்லையில் நிவாரண உதவி.. டென்ஷன் ஆகி கத்திய புஸ்ஸி ஆனந்த்.. கூலாக சமாளித்த விஜய்! என்ன நடந்தது
நெல்லை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லையில் இன்று நடைபெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் நேரடியாக கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. விடிய விடிய இடைவிடாமல் கொட்டி தீர்த்த இந்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வெள்ள பாதிப்பில் இருந்து மீள சிலநாட்கள் ஆனது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. பேருந்து நிலையம் அருகே இருந்த கடைகளும் தண்ணீரில் மூழ்கின. வெள்ளம் நீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப சில நாட்கள் ஆகிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீள ஒருவாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. தற்போதும் கூட தூத்துக்குடியில் சில கிராமங்களில் குளம் உடைந்து வெள்ளம் நீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரண நிதி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை அறிவித்தது. நேற்று முதல் வெள்ள நிவாரணம் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதுபோக அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கின. இந்த நிலையில் தான், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று நெல்லை, தூத்துக்குடியில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், நெல்லையில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் நெல்லை சென்ற விஜய், நெல்லை கே.டி.சி நகரில் நடக்கும் விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கத்திய புஸ்ஸி ஆனந்த்: நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது பாதிகப்பட்ட மக்களுக்கு தன் கைகளாலே நிவாரணப்பொருட்களை விஜய் வழங்கி வந்தார். நிவாரண பொருட்கள் வழங்கிக் கொண்டு இருந்த போது பெண் ஒருவர் அதை வாங்கிவிட்டு சற்று தடுமாறினார். அந்த சமயத்தில் விஜய் அருகே நின்று கொண்டிருந்த புஸ்ஸி ஆனந்த் ஆவேசம் அடைந்து அங்கிருந்தவர்களை பார்த்து ஏதோ கத்தினார்.
சமாதானம் செய்த விஜய்: உடனே அங்கு இருந்த விஜய்.. ஏன் கோபப்படுறீங்க... கூலாக இருங்கள் என்பது போல தனது கைககளால் சைகை செய்து அமைதியாக இருக்கும்படியும்.. அங்கும் இங்கும் நின்றவர்களை வரிசைப்படுத்தியும் நிற்க சொன்னார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications