விவசாயிகளுக்கான நல்லரசாக இந்தியா மாறனும்.. வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்.. நடிகர் விஜய்
விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்திய மாற வேண்டும் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை: முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும் என்றும் வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை என கவலை தெரிவித்தார்.
மேலும் 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது என்று கூறிய விஜய், அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும் கூறினார்.
விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட எனவும் முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும். வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம் என்றார் நடிகர் விஜய்.