’விடாது கருப்பாய்’ விஷால்... ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியுடன் சந்திப்பு!
Recommended Video
சென்னை: நிராகரிக்கப்பட்ட தன்னுடைய வேட்பு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நடிகர் விஷால் ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று வெளியாகும் நிலையில் கடைசி முயற்சியாக விஷால் தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் முறையிட்டு வருகிறார்.
நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் சுமதி மற்றும் தீபன் இருவரின் கையெழுத்து போலியானது என்று எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் மிரட்டப்பட்டதால் சுமதியும், தீபனும் பின்வாங்கியதாக ஆடியோ ஆதாரத்தை விஷால் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் புகார் மனு அளித்தார்.
இதனையடுத்து சுமதி, தீபன் இருவரையும் 3 மணிக்குள் தேர்தல் அதிகாரி முன்பு நேரில் ஆஜர்படுத்தினார் மனுவை பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறிவிட்டார். ஆனால் சுமதியும், தீபனும் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து நிலைமையை விவரித்து வருகிறார். தம்முடைய மனுவை நிராகரிக்காமல் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் விஷால் கோரிக்கை விடுத்து வருகிறார்.
ஆனால் அவருடைய மனு பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. மேலும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலும், அவர்களுக்கான சின்னமும் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.