ஆதார் எண் இருந்தால் தான் இனிமேல் வாகனங்கள் வாங்க முடியுமாம்!
புதிய வாகனங்களை வாங்கி, பதிவு செய்ய வேண்டுமானாலும் ஆதார் எண், பான் கார்டு மற்றும் செல்பேசி எண் இன்று முதல் கட்டாயம் என மாநில போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும், புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் கார்டு மற்றும் செல்பேசி எண் ஆகியவற்றை சமர்பிப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது என போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக அளவு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தினம் தினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிதாக பல ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இனி தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் புதிய வாகனங்களைப் செய்யும்போது உரிமையாளரின் ஆதார் எண், செல்பேசி எண் மற்றும் பர்மனெண்ட் அக்கவுண்ட் நம்ப்பர் எனப்படும் பான் நம்பர் ஆகியவற்றை கட்டாயமாகக் கொடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஆகையால், புதிய வாகனத்தை பணம் கொடுத்து கஷ்டப்பட்டு வாங்கினாலும், அதை பதிவு செய்ய பான் நம்பரும் ஆதார் எண்ணும் கட்டாயம் என்பதால், வாகனம் வாங்குவதற்கு முன்பு, இந்த ஆவணக்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொண்ட பின்பே புதிதாக வாகனம் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது.
மத்திய அரசு பல்வேறு வகைகளில் ஆதார் அவசியம் என்று வலியுறுத்தினாலும் இதுவரை 80 சதவித மக்களே ஆதார் எண் பெற்றுள்ளனர். அதேபோல், நிரந்தர வருவாய் பெறும் மக்களைத் தவிர, பெரும்பாலானோரிடம் பான் நம்பர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவால் மாணவர்கள், இல்லத்தரசிகள் தங்கள் பெயரில் வாகனம் வாங்குவதும் பதிவு செய்வதும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.