அதிமுகவை விட்டு ஓடுகிறாரா சசிகலா?.. "லெட்டருக்காக" காத்திருக்கும் அதிமுகவினர்!
அதிமுகவில் நீடிக்கும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் இருந்து அறிக்கை வரும் என்று கட்சியினர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை : அதிமுகவின் இரு அணிகள் இணைவதில் பெரும் சிக்கலாக இருக்கும் சசிகலாவிடம் இருந்தே அவரின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதம் வரும் என்று கட்சியினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
அதிமுகவின் இரு அணிகள் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் விதித்த முக்கிய நிபந்தனைகளில் ஒன்று சசிகலா குடும்பத்தினர் கட்சி பொறுப்பில் இருக்கக் கூடாது என்பதே. இரு அணிகளும் இணைவதில் தமக்கு விருப்பம் என்று துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தனது விலகலை வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு பிறகு ஓ.பி.எஸ் அணியினர் சசிகலா, தினகரனின் அதிகாரப்பூர்வ விலகல் கடிதத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரமாக கட்சியினர் மத்தியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட விஷயம் பெங்களூரு சிறையிலிக்கும் சசிகலாவிடம் இருந்து அறிக்கை வரும் என்பதாகவே இருந்ததாம். அதிமுகவின் முக்கிய அனுதாபி பத்திரிகையாளர் ஒருவர் மாதிரிக்கடிதம் ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு படித்துக்காட்டியதாகவும், எப்போதுவேண்டுமானாலும் சசிகலாவின் கையெழுத்துடன் கடிதம் வெளியாகலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.
கடிதத்தில் என்ன?
கட்சி பொறுப்புகளிலிருந்து தாம் முழுமையாக விலகுவதாகவும், அரசியல் எதிரிகளால் தான் சந்தித்துவரும் நெருக்கடியை வென்று கழகத்தை காப்பாற்றுவேன் என்றும், நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் மாதிரிக் கடிதத்தில் சொல்லப்பட்டதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு இருந்தது. ஆனால், இதுவரைக்கும் அது போன்ற எந்த கடிதமும் சசிகலாவிடம் இருந்து வெளியாகவில்லை.
அடுத்தது என்ன?
சசியிடம் இருந்து கடிதம் வந்தால், ஓ.பி.எஸ் அணியினர் ஒற்றுமை பேச்சுவார்த்தைக்கு வழிவருவார்கள் என்பது பிரம்மாஸ்திரமாக பார்க்கப்பட்டது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். அதுவும் நடக்காமல் போனதால், அடுத்தது என்ன? என்ற குழப்பம் நீடிக்கிறது. ஒரு பக்கம் ஓ.பி.எஸ், மறுபக்கம் பழனிச்சாமி என மாற்றி மாற்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்கள். தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நடக்கிறது பயணப்போட்டி. ஆனால், பேச்சுவார்த்தை அல்லது சேர்வதற்கான வாய்ப்பு குறித்து இரு அணியும் தற்போது பேசத்தயாராக இல்லை. எனவே, இணைப்புக்கு பதில் விரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தினகரன் என்ன சொல்கிறார்?
திகார் சிறையில் இருக்கும் தினகரன் தற்போது வழக்கறிஞர்கள் மூலம் சமிஞ்கைகளை சசிகலாவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். எப்படியாவது இரு அணியையும் இணைக்கவேண்டும். சின்னத்தை மீட்கவேண்டும் என்பது அவரது நோக்கமாக உள்ளது என்கிறார்கள் திகார் வாசலில் முகாமிட்டுள்ள சில அதிமுகவினர்.
தடையாக நிற்பது எது?
இரு அணிகள் இணையும் ஐடியாவை தொடங்கியதே சசிகலாதான் என தூபம் போடும் சில ஆதரவாளர்கள், சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடித விவகாரம் தள்ளிப்போவதாக சொல்கின்றனர். முன்பு தங்கியிருந்த அறையில் அவ்வப்போது சிகிச்சைபெற்றுவந்ததாகவும், தற்போது சிறைவளாகத்தில் உள்ள மருத்துவமனை அறையில் தங்கி சிகிச்சை எடுக்கும் அளவிற்கு உடல்நலம் குன்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மனநல பாதிப்பே சசிகலா உடல் நலத்தில் சோர்வடைய காரணம் என மருத்துவர்கள் கருதுவதால், விரைவில் நல்ல முடிவெடுக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.