கோவில் விழா பத்திரிக்கையில் அமைச்சர் பெயர் போடாதது ஏன்? செயல்அலுவலரை தாக்கி செவிடாக்கிய அதிமுகவினர்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பெருமாள் கோவில் திருவிழா பத்திரிகையில் அமைச்சர் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி செயல் அலுவலரை சரமாரியாக தாக்கி, காதை செவிடாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி செயல் அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில், நின்ற நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் ஆனி பெருவிழா நடந்து வருகிறது. எட்டாம் நாள் திருவிழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் என்பவர் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அலுவலகத்திற்குள் நுழைந்த இருவர், தங்களை அதிமுகவினர் என்று கூறினர். 'கோவில் திருவிழா பத்திரிகையில் அமைச்சர் பெயரை ஏன் போடவில்லை?' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் செயல் அலுவலரை சரமாரியாக தாக்கினர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட செயல் அலுவலரின் இடது காது பாதிக்கப்பட்டது. உடனடியாக, அவர் தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செயல் அலுவலரை தாக்கிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறநிலையத் துறை செயல் அலுவலர் சங்கத்தினர் கூறுகையில், 'இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு, சி.எஸ்.ஆர். பெறப்பட்டுள்ளது. துறை அமைச்சர் சங்கத்தினரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இரண்டு நாட்களில் எப்.ஐ.ஆர் போடாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
கோவில் திருவிழா பத்திரிகையில் அமைச்சர் பெயர் போடவில்லை என்ற காரணத்திற்காக, செயல் அலுவலர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆக்கிரமிப்பு பிரச்னை என்று கூறப்படுகிறது.
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் அடிவாரம் சுற்றி, கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. கட்சி பாகுபாடின்றி கோவில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை மீட்பதற்காக செயல் அலுவலர் முருகன் போராடி வருகிறார்.
இதை மனதில் வைத்தே செயல் அலுவலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அதே கோவிலில், இரண்டு செயல் அலுவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
நான், எட்டாம் நாள் விழாவிற்கான ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அப்போது, தங்களை அதிமுகவினர் என்றும், ஊரக தொழில் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விசுவாசிகள் என்றும் கூறி வந்த இருவர், 'அமைச்சர் பெயரை ஏன் திருவிழா பத்திரிகையில் போடவில்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு நான், அமைச்சரின் பெயரை பத்திரிகையில் போட்டால், பாரம்பரிய நடைமுறை மீறல் பிரச்னை ஏற்படும் என்று கூறினேன். ஆனால், என் பதிலை பொருட்படுத்தாமல் என்னை சரமாரியாக தாக்கினர். அவர்கள் அடித்ததில் என் இடது காதில், சவ்வு கிழிந்து காது கேட்காமல் போனது. ஏற்கனவே, அந்த காது பிரச்னையில் இருந்தது. தற்போது, தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செயல் அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.