அதிமுக கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை- ராஜபாளையத்தில் விபரீதம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்து சராமாரியாக வெட்டித்தள்ளிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம் திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் மீனாட்சிசுந்தரம் (வயது 37). பல்வேறு தொழில்கள் செய்து வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் ராகுல் (14) என்ற ஒரு மகனும், அட்ஷயா (12) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2006-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது தே.மு.தி.க. சார்பில் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சில மாதங்களில் அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபாளையம் நகராட்சி 17-வது வார்டு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். இளைஞரணி நகரச் செயலாளராகவும் இருந்து வந்தார்.
கோவிலுக்குப் போன மீனாட்சி சுந்தரம்
வீட்டில் இருந்து மதுரை ரோட்டில் உள்ள பஞ்சு மார்க்கெட் அருகில் உள்ள தனது அலுவலகத்துக்கு செல்வதற்கு முன் இரு சக்கர வாகனத்தில் மயூரநாத சுவாமி கோவிலுக்குச் சென்று அங்கு சாமி கும்பிடுவது வழக்கம். அதேபோல் இன்று காலை 8.45 மணியளவில் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் மீனாட்சிசுந்தரம் புறப்பட்டார். மயூரநாத சுவாமி கோவிலுக்கு சென்று அங்கு சாமி கும்பிட்டுவிட்டு காலை 9.20 மணிக்கு தனது அலுவலகத்திற்கு வந்தார்.
பின்தொடர்ந்த மர்மநபர்கள்
அலுவலகத்துக்கு வந்து இறங்கியதும் அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் 3பேர் திடீரென்று சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
பட்டப்பகலில் படுகொலை
பலத்த வெட்டுக் காயமடைந்த மீனாட்சி சுந்தரம் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலைக்கு காரணம் என்ன?
இதுபற்றி தகவலறிந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாட்சிசுந்தரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? ரியல் எஸ்டேட் தொழிலில் இடம் வாங்கி விற்பனை செய்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மர்மநபர்கள் யார்?
வீட்டில் இருந்து புறப்பட்ட மீனாட்சிசுந்தரத்தை 5பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். மயூரநாதர் கோவில் அருகில் காத்திருந்த மர்ம ஆசாமி அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றதை செல்போன் மூலம் மற்றொருவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மதுரை ரோட்டில் உள்ள மீனாட்சிசுந்தரத்தின் அலுவலகம் அருகே உள்ள ஒரு டீ கடையில் நின்று கொண்டு கண்காணித்து அவரும் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த நான்கு பேர்
இந்த தகவலின் அடிப்படையில் 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து மின்னல் வேகத்தில் மீனாட்சிசுந்தரத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
16 இடங்களில் வெட்டினர்
அவரது அன்றாட பணிகளை நோட்டமிட்டு கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் தான் கொலை சதியை நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது. மீனாட்சிசுந்தரத்தின் உடலில் 16 இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.
உறவினர்கள் மறியல்
குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மீனாட்சிசுந்தரத்தின் உறவி னர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.