நரி ஊளையிட்டுதான் பொழுது விடிந்ததாம்... ஸ்டாலின் மீது நமது எம்ஜிஆர் கடும் பாய்ச்சல்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் 'ஏவுகணை' என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள விமர்சனம்:
"மாநிலத்தின் நலன் மற்றும் மக்களின் நலன் பற்றி கிஞ் சித்தும் கவலைப்படாமல் சிலர் பேட்டி கொடுத்தார்கள்..."
என்று திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் மீது ஸ்டாலின் பாய்ந்திருக்கிறார்!

பிணி என்பது சகலருக்கும் பொதுவான சங்கடம். அது நாட்டை வழிநடத்தும் தலைவருக்கு எனும்போது மக்களுக்குக் கவலையாகிறது.
மனச்சாட்சியற்ற அரசியல் தரக்குறைவுகளோ அதனை தங்களுக்கான தற்காலிக அரசியல் வாய்ப்பென்று கருதுகின்றனர். ஆனால் அரசியலைக் கடந்து நாட்டு மக்களின் நலத்தை மட்டுமே கருதுகிற நல்மனம் படைத்த தலைவர்களோ கல்மனம் படைத்தவர்களின் கருத்துக்கு மாறாக பூரண நலம் பெற்று திரும்பும் வரை நாட்டை ஆளும் தலைவருக்காக நல்லதையே நினைக்கிறார்கள்.
இதில் முன்னதில் கைதேர்ந்தது மு.க. குடும்பம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உச்சந்தொட்டு நின்றபோது முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை என்று மல்லாந்து படுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிய கருணாநிதி அன்று நாற்பது நாட்கள் போரூர் மருத்துவமனையில் புறமுதுகோடி பதுங்கியிருந்தார் என்பதை வரலாறு அறியும்.
அப்போது அமைச்சரவையை வழிநடத்த அவர் யாரையும் நியமிக்கவில்லை. அதுபோலவே, துணை முதல்வராக இருந்த அவரது புத்திரர், வடகொரியா, அமெரிக்கா, லண்டன்... என்றெல்லாம் பயணங்களை பலமுறை மேற்கொண்டபோது தன்னிடமிருந்த உள்ளாட்சித் துறை போன்ற அதிமுக்கிய துறைக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு மர்மப் பயணம் போகவில்லை.
ஆனால் இப்போது, இருபது நாட்கள் மருத்துவமனை சிகிச்சையை தொடரும் நிலையிலேயே ஆளுநரிடம் அறிவுறுத்தி, தம்முடைய துறைகளை நிதியமைச்சரிடம் ஒப்படைத்து அமைச்சரவைக் கூட்டங்களை வழிநடத்த ஆவன செய்திருக்கிறார் எங்கள் அம்மா என்றால் அது மக்கள் மீது எங்கள் மகராசி கொண்டிருக்கும் மாசற்ற பற்றும், மக்களாட்சி மீது கொண்டிருக்கும் மாண்பையும்தான் காட்டுகிறது.
இந்நிலையில் பொறுப்பு முதல்வரோ, தற்காலிக முதல்வரோ அவசியமில்லை என்று பெருந்தன்மையோடு கருத்து தெரிவித்த மாற்றுக் கட்சித் தலைவர்களை, மக்கள் நலத்தின் மீது கிஞ்சித்தும் அக்கறை இல்லாதவர்கள் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
கூடவே, நாங்கள் வைத்த கோரிக்கையால்தான் இது நடந்திருக்கிறது என்பதாக நரி ஊளையிட்டுத்தான் பொழுது விடிந்திருக்கிறது என்பதாக புல்லரித்துக்கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications