ரூ.10 ஆயிரம் கோடி பணத்தை வாக்காளர்களுக்கு வாரி இறைத்த திமுக, அதிமுக: ராமதாஸ்
சென்னை: அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பில் மட்டும் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவுமின்றி மிகவும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்திருக்கிறது. தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் காவிரிப்பாசன மாவட்டங்களில் பலத்த மழை பெய்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் மாலை 6.00 மணி நிலவரப்படி 75%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. பல வாக்குச்சாவடிகளில் மக்கள் இன்னும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்க்கூடும். இவை அனைத்துமே மாற்றத்திற்கான வாக்கு களாகும்.
தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவித்த நாளிலிருந்து வாக்கு சேகரிப்பதிலும், கொள்கைகளை விளக்குவதிலும் ஆர்வம் காட்டாத திராவிடக் கட்சிகள், கடந்த காலங்களில் ஊழல் செய்து சேர்த்து வைத்த பணத்தை தொகுதிகளுக்கு கொண்டு சென்று பதுக்கி வைப்பதில் தான் அக்கறை காட்டின. எதிர்பார்த்தபடியே தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்த இரு கட்சிகளும் பண மழை பெய்ய வைத்தன. ஒரு ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.5000 வரை பணம் வாரி இறைக்கப்பட்டது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பில் மட்டும் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கிறது. பண வினியோகம் மிக அதிக அளவில் இருந்ததாக கூறி தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதே இதற்கு உதாரணம் ஆகும். இந்தியத் தேர்தல் வரலாற்றில் அளவுக்கு அதிகமான பண வினியோகத்தைக் காரணம் காட்டி எந்த தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் பண பலம் பயன்படுத்தப்பட்டதற்காக இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு.
திராவிடக் கட்சிகள் வாக்குகளுக்காக பணத்தை வாரி இறைத்தாலும், அதைப் பார்த்து மயங்கி விடாமல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. அதன் பயனாக தமிழகத்தில் மாற்றமும், அதனால் முன்னேற்றமும் ஏற்படுவது உறுதியாகிவிட்டது. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வாக்களித்தவர்கள் உட்பட இந்த தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், புதுவை மாநிலத்திலும் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். புதுவையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications