அதிமுக ஆட்சியின் 100 நாள் சாதனை... அடுத்தடுத்து கொலைகள்... மிரள வைக்கும் கொள்ளைகள்!!
சென்னை: அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்று 100 வது நாளில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சட்டசபை, தலைமை செயலகம் ஆகியவை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாலையில் இருந்து சட்டசபை வரை குலையோடு கூடிய வாழை மரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வண்ண வண்ண பூக்களால் தூண்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதனை ரசிக்க முடியாத அளவிற்கு தமிழகத்திற்கு இன்றைக்கு மட்டும் 3 கொலை சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடந்தேறியுள்ளது.
தமிழகத்தில் கரூர், தூத்துக்குடியில் ஒருதலைக்காதலால் இரண்டு கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தூத்துக்குடி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நியூமேன் மகள் பிரான்சினா,25. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்த்து வந்தார். வழக்கம் போல இன்று பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற பிரான்சினா பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் கிறிஸ்துவ ஆலயத்தில் நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது அங்கே, அரிவாளுடன் வந்த கீஜன் என்பவர் திடீரென ஆசிரியை பிரான்சினாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். தலை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. உடனே அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த ஆசிரியருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். கீஜன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீ பெரும்புதுவீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே ஆத்தனஞ்சேரியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், தர்ஷன்,4 என்ற மகனும், ரூபிகா,3 என்ற மகளும் உள்ளனர்.
கோவிந்தனின் வீட்டு மாடியில் அவரது அக்கா மகள் அமுதா குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமுதாவின் கணவர் டெய்லர் வேலையும், அமுதா வீட்டருகில் உள்ள டாக்டர் வீட்டில் வேலை பர்க்கிறார். திவ்யா தனது குழந்தைகளை காலையில் பள்ளிக்கு வேன் மூலம் அனுப்புவார். மதியம் குழந்தைகளை அமுதா அழைத்து வருவது வழக்கம். நேற்று மதியம் வழக்கம் பள்ளிக்கு சென்று வந்த குழந்தைகளை அமுதா அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டை திறந்து பார்த்த பொழுது, திவ்யாவை காணவில்லை. உள்ளே சென்று பார்த்தபொழுது, அவர் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினரை அமுதா சத்தம் போட்டு கூப்பிட்டார். அவர்கள் வந்து பரிசோதித்ததில் திவ்யா இறந்தது தெரிந்தது.
நகைக்காக கொலை
இதுகுறித்து விசாரித்த போலீசார், திவ்யாவின் முகத்தில் கையால் தாக்கிய காயமும், கழுத்தில் பலமாக அடிபட்ட காயமும் உள்ளதை பார்த்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொள்ளையர்கள் திவ்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து குளியல் அறையில் போட்டு விட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் உள்பட 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதனை அடுத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகைக்காக மூதாட்டி கொலை
மதுரை மகாத்மா நகர் பகுதியில் வசித்து வந்த மோகனா என்ற மூதாட்டி, கணவர் இறந்த பின்னர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை வீடு திறக்கப்படாததை பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் வீட்டை உடைத்து பார்த்த போது, மோகனா கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 7 சவரன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
வந்தவாசியில் நகை கொள்ளை
இதேபோன்று வந்தவாசி அருகே வெங்கடேசன் என்கவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25,000 உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது. இதேபோல அரவக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் கமெண்ட்
@drramadoss ஒரு பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இதற்க்கு அதிமுக அரசு தலைகுனிய வேண்டும்..
— P.TAMILARASAN (@PTAMILARASAN4) August 31, 2016
பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லை. இதற்கு அதிமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கமெண்ட் அடித்துள்ளார்.
மக்களாட்சியா மசாலாபடமா?
ஜெயலலிதா அரசின் 100-ஆவது நாள் கொண்டாட்டம்: மக்களாட்சியைக் கூட மசாலாப் படத்துக்கு இணையாக மாற்றியது தான் திராவிட சாதனை!
— Dr S RAMADOSS (@drramadoss) August 31, 2016
இதேபோல டாக்டர் ராமதாஸ் 100வது நாள் கொண்டாட்டத்தை கிண்டலடித்துள்ளார். மக்களாட்சியைக் கூட மசாலாப் படத்துக்கு இணையாக மாற்றியது தான் திராவிட சாதனை! என்று பதிவிட்டுள்ளார்.
100 நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிமுகவின் ஐடி அணி வெளியிட்டுள்ள வீடியோவில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக கூறியுள்ளனர். ஆனால் சட்டசபை நடைபெறும் இந்த சமயத்தில் கொலைகள், கொள்ளைகள் அதிக அளவில் அரங்கேறிவருவது, ஆளுங்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.