கருணாநிதி மீனவர்களின் நண்பன்... தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: சொல்வது மு.க ஸ்டாலின்
சென்னை: கருணாநிதி மீனவர்களின் உற்ற நண்பனாக இருக்கிறார் என்று திருவொற்றியூரில் மீனவர்கள் மத்தியில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. மேற்கொண்ட சாதனை திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 3ந்தேதி முதல் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, திருவொற்றியூர் தேரடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மீனவ பிரதிநிதிகள், மீனவ மகளிர்களை மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்தார். மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை மு.க.ஸ்டாலினிடம் மனுவாக அளித்தனர்.
மீனவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆணையின்படி 234 தொகுதிகளுக்கும் ‘நமக்கு நமக்கு' விடியல் மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.கருணாநிதியின் அறிவுரை, ஆலோசனை, எண்ணத்தின்படி எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறேன் என்றார்.
ஒருநாள் முதல்வர்
அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் அர்ஜூன் நடித்த ‘முதல்வன்' திரைப்படத்தில், ஒரு நாள் முதல்வர் என்று காட்சி வரும். அதுபோல இன்று அரை மணி நேரம் முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு வந்தாலே செய்தி.
ஓய்வறியாத சூரியன்
5 முறை முதல்வராக கருணாநிதி இருந்த போது கோட்டைக்கு அவர் வரவில்லை என்றால் தான் செய்தி. சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களிலும் அவர் கோட்டைக்கு வந்தார்.
மீனவர்களின் நலன்
இலங்கை ராணுவத்தால் 104 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 66 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. விசை படகுகளை பழுது பார்க்கும் கடினமான தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.300 மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை உயர்த்த அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மீனவர்கள் நண்பன்
மீனவர்களுக்கு மானிய விலை டீசல் 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா உறுதிமொழி அளித்தார். ஆனால், வழங்கவில்லை.
மீனவர்கள் நண்பன் கருணாநிதி. மீனவர்களுக்கு 2007ம் ஆண்டு நல வாரியத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவாக்கி தந்தார். சென்னை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ. 1,956 லட்சம் நிதி ஒதுக்கினார்.
நிவாரண தொகை
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சிங்கார வேலர் பெயர் சூட்டினார். மீன்பிடிக்கும் போது உயிரிழக்கும் மீனவர்களுக்கு நிவாரண தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கினார். மீனவர்களின் உற்ற நண்பனாக கருணாநிதி இருக்கிறார்.
தமிழகத்தில் மாற்றம்
தமிழகத்தில் அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை எங்களை விடவும் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தான் உங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க வந்திருக்கிறீர்கள். செயல்படாத இந்த அரசை வழியனுப்பி, மக்கள் உணர்வுகளை மதித்து கோரிக்கைகளை நிறைவேற்றும் பெரிய மாற்றம் தமிழகத்துக்கு தேவைப்படுகிறது.
திமுக ஆட்சி
இதற்கு வாய்ப்பு வருகிற சட்டமன்ற தேர்தல் தான். ஆகவே வருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும். பிப்ரவரி மாதம் 12ந் தேதிக்குள் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளேன். சென்னையை பொருத்தமட்டில் ஜீப், கார், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகையால் கலந்துரையாடல் நடத்துகிறேன்.
அரசு ஊழியர்கள்
ஆட்சி என்பது மக்களுக்கு பணியாற்ற காத்திருக்கும் தேர். அந்த தேர் செல்ல சக்கரத்தைப்போல பக்கபலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பணியாற்றுபவர்களும் அவர்கள் தான். அதேநேரம் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
கருணாநிதி அரசு
எதிர்கால சிற்பிகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களை யாருமே நிறைவேற்றவில்லை. பொங்கலுக்கு போனஸ் வழங்கும் திட்டம் முதன்முதலாக தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்கிறது. அரசு ஊழியர்களின் குறைகளை கேட்கக்கூட தற்போதைய அரசு தயாராக இல்லை.
குறைகளை கேட்போம்
மக்களுக்கு சேவை செய்கிறவர்கள் அரசு ஊழியர்கள். ஆகவே அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் அரசு இருந்தால் தான், மக்கள் நலப்பணிகளை நீங்கள் உற்சாகமாக செய்வீர்கள் என்பதில் தி.மு.க. தெளிவாக இருக்கிறது. ஆட்சியில் இல்லாத சமயத்தில் குறைகளை கேட்பதுபோல, பொறுப்புக்கு வந்த பின்னரும் அனைவரையும் அழைத்து குறைகளை கேட்கும் ஆட்சியை தி.மு.க. அமைக்கும் என்று பேசியுள்ளார் ஸ்டாலின்.