தினகரன் ஜெயிக்க சான்ஸே இல்லை.. ஜெயிச்சாலும் சி.எம். ஆக முடியாது.. உள்ளடி வேலைகள் ஜரூர்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் ஜெயித்து விடுவாரோ, முதல்வராகி விடுவோரா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஆனால் அதுகுறித்து மக்களுக்கு அச்சமே தேவையில்லையாம். காரணம், தினகரனுக்கு எதிராக கொங்கு மண்டல அதிமுக தலைவர்கள் சத்தம் போடாமல் காய் நகர்த்தி வருகின்றனராம்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை மையமாக வைத்து அதிமுகவில் அடுத்த புயல் வீசும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அதற்கேற்ப பல முனைகளிலும் காய் நகர்த்தல்கள் ஆரம்பித்து விட்டனவாம்.
தினகரன் இங்கு போட்டியிடுகிறார் என்ற தகவல் லேசுபாசாக அடிபட ஆரம்பித்ததுமே இந்த காய் நகர்த்தல்களும் ஆரம்பித்து விட்டனவாம். எனவே தினகரன் வெல்ல வாய்ப்பில்லை அப்படியே வென்றாலும் அதிமுக உடையும் என்று பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதலில் தினகரன் பெயர் அடிபடவில்லை. வேறு சிலரின் பெயர்கள்தான் அடிபட்டு வந்தன. ஆனால் கடைசி நேரத்தில் அவரே போட்டியிட முடிவெடுத்து விட்டார் தினகரன்.
நால்வர் அணியின் சேட்டை
இதற்கு முக்கியக் காரணமே தினகரனுடன் எப்போதும் ஜால்ரா அடித்தபடி இருக்கும் நால்வர் அணிதான் காரணம் என்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஐடியா, திட்டப்படிதான் தற்போது தினகரன் நடக்கிறாராம்.
கொங்கு மண்டலத்து பிளான்
ஆனால் மறுபக்கம் தினகரனுக்கு பெரிய ஆப்பு ரெடியாகி வருகிறதாம். இதை செய்வது கொங்கு மண்டலத்துத் தலைவர்கள் என்கிறார்கள். தினகரன்தான் வேட்பாளர் என்று எப்போது பேச்சு எழுந்ததோ அப்போதே ஒரு குரூப் அவருக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்து விட்டதாம்.
ஜெயிக்க மாட்டார் அல்லது ஆட்சி நீடிக்காது
தினகரை ஜெயிக்க விடக் கூடாது என்பதுதான் இவர்களின் முதல் திட்டமாம். இதற்கான வேலைகளை இவர்கள் முடுக்கி விட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஒரு வேளை மீறி ஜெயித்து விட்டால், ஆட்சியைக் கவிழ்ப்பது என்பதில் இவர்கள் தீர்மானமாக உள்ளனராம்.
முதல்வராக வரக் கூடாது
என்ன ஆனாலும் சரி தினகரன் முதல்வர் பதவிக்கு வந்து விடக் கூடாது. பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்து விடக் கூடாது என்பதில் இவர்கள் தீர்மானமாக உள்ளனராம். அதற்கேற்றார் போல காய் நகர்த்திக் காத்துள்ளனராம்.
சசிகலாவுக்கு ஓ.பி.எஸ்.. தினகரனுக்கு எடப்பாடியார்?
எப்படி சசிகலாவை முதல்வராக விடாமல் ஓ.பி.எஸ் தடுத்து காரியம் சாதித்தாரோ அதேபோல தினகரனையும் முதல்வராக விடாமல் எடப்பாடி பழனிச்சாமி தடுத்து நிறுத்துவார் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
ஆக மறுபடியும் மக்களுக்கு ஒரு "என்டர்டெய்ன்மென்ட்" காத்திருக்கு!