அதிகரிக்கும் உளறல் + சர்ச்சை.... மீடியா கிட்ட யாரும் பேசாதீங்க.. அதிமுக நிர்வாகிகளுக்கு மேலிடம் தடை
அதிமுக நிர்வாகிகள் தொலைகாட்சி, ஊடகங்கள், ரேடியோ உள்ளிட்டவற்றுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே மோதல் இருப்பது போன்று ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி வருவதால் இனி அதிமுக நிர்வாகிகள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இந்த சின்னத்தை திரும்ப பெறுவதற்காகவும் கட்சியின் நலன் கருதியும் அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தனர்.
அப்போது துணை முதல்வராக ஓபிஎஸ்ஸும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால் தினகரனும் அவரது அணியினரும் தனியாக செயல்பட்டனர். இதனிடையே அதிமுக மூத்த நிர்வாகி மைத்ரேயன் எம்.பி. தனது பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
ஆளுக்கொரு கருத்து
அதில் அவர் குறிப்பிடுகையில் அதிமுகவின் அணிகளும் இணைந்துவிட்டன. ஆனால் மனங்கள் இணையவில்லை என்று கூறியிருந்தார். இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் டிவி விவாதங்களிலும் பங்கேற்று ஆளுக்கு ஒரு கருத்தை கூறி வந்தனர்.
இருவர் இணைந்தால்...
இதனால் மகிழ்ச்சி அடைந்த தினகரன் அணியினர் கட்டாய திருமணத்தின் பேரில் இருவர் இணைந்தால் கடைசியில் விவாகரத்தில்தான் முடியும் என்று அதிமுக இணைப்பு குறித்தும் மைத்ரேயன் கருத்து குறித்தும் விமர்சித்திருந்தனர்.
முப்பெரும் விழா
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதை கொண்டாட மதுரையில் நடந்த முப்பெரும் விழாவில் ஓபிஎஸ் தரப்பினரை அழைக்கவில்லை என்று ஒரு பஞ்சாயத்து ஓடியது.
டிவி விவாதங்கள்
இதுபோல் ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறிவருவதால் கட்சிக்குள் தேவையில்லாமல் பிரச்சினை வருவதைத் தடுக்க முதல்வரும், துணை முதல்வரும் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் அதிமுக சார்பில் ஊடகங்களால் நடத்தப்படும் விவாதங்களில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க ஒரு புதிய குழு விரைவில் கழகத்தின் சார்பில் அமைக்கப்படவுள்ளது. இந்த குழுவில் இடம்பெறும் கழக உடன்பிறப்புகள் மட்டுமே டிவி விவாதங்களில் கலந்து கொண்டு கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக தமிழக அரசின் சாதனைகளையும், கழகத்தின் நிலைப்பாடுகளையும் கழகம் கூற விரும்பும் கருத்துகளையும் எடுத்துரைப்பர்.
ஊடகங்களில் விவாதங்களில்...
இந்த குழுவின் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதன் பிறகே ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கழகத்தின் சார்பில் குழுவில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுவரை அதிமுக நிர்வாகிகள் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தர தடை விதிக்கப்படுகிறது. டிவி விவாதங்களிலும் அவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.