இதுதான் அதிமுக... வலியக் கிடைத்த அனுதாப அலையை அதிருப்தி அலையாக மாற்றிய கொடுமை!
சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சாதாரண சிறைத் தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் என்று தீர்ப்பு வந்ததுமே தமிழகம் முழுக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் அனுதாப அலையே மேலோங்கிக் காணப்பட்டது. மக்கள் இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை.. அரசியல்வாதிகள்தான் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்த அனுதாப அலையை அதிமுகவினரின் செயல்கள் அதிருப்தி அலையாக மாலைக்குள் மாற்றி விட்டன.
பகலில் நிலவி வந்த அனுதாபம், அதிமுகவினரின் கல்வீச்சு, கட்டாயக் கடையடைப்பு, பஸ் போக்குவரத்தை முற்றிலுமாக முடங்கிப் போகச் செய்தது, கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட செயல்கள் மக்களிடையே அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி விட்டன.
நேற்று இரவு கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவு போட்டது போல பெரும்பாலான ஊர்கள் காணப்பட்டன. கிட்டத்தட்ட எங்குமே பஸ்கள் ஓடவில்லை. கடைகள் திறக்கப்படவில்லை. சாலைகளில் அதிமுகவினரின் தலைகளாகத்தான் இருந்தன. பைக்குகளிலும், ஆட்டோக்களிலும், எங்காவது கடை திறந்திருக்கிறதா,, திறந்திருந்தால் விடாத அடித்து நொறுக்கு என்று அட்டகாசம் செய்து விட்டனர் அதிமுகவினர்.
தீர்ப்பு வெளியானதுமே போராட்டங்கள்
நேற்று பெங்களூர் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதுமே அதிமுகவினர் போராட்டங்களில் குதித்து விட்டனர். ஆரம்பத்தில் இது போராட்டமாகத்தான் வெடித்தது. ஆனால் போகப் போக வன்முறையாக மாறியது.
கல்வீச்சு - கொடும்பாவி எரிப்பு
பஸ்கள், திமுகவினரின் வீடுகள், அலுவலகங்கள் மீது கல்வீச்சு, கட்டாயப்படுத்தி கடைகளை அடைக்கச் சொன்னது, சாலை மறியல் என அதிமுகவினர் வன்முறையில் குதித்தனர்.
பயத்தால் கடைகளை மூடிய வியாபாரிகள்
பல இடங்களில் அதிமுகவினருக்குப் பயந்து வியாபாரிகள் கடைகளை மூ்டியதைப் பார்க்க முடிந்தது.
மெடிக்கல் ஷாப்களுக்கு மட்டும் அனுமதி
பெரும்பாலான இடங்களில் எந்த கடையையும் திறக்க அதிமுகவினர் அனுமதிக்கவில்லை அல்லது அவர்களுக்குப் பயந்து யாரும் கடைகளைத் திறக்க வில்லை. மெடிக்கல் ஷாப்களையும், மருத்துவமனைகளையும் மட்டுமே விட்டு வைத்தனர் அதிமுகவினர்.
ஏடிஎம் மையங்கள் மூடல்
பல ஊர்களில் ஏடிஎம் மையங்களைக் கூட மூடச் சொல்லியுள்ளனர் அதிமுகவினர். அவசரத்திற்குக் காசு எடுக்கப் போனவர்கள் பலரும் என்னடா இது.. இதைக் கூட மூடி வச்சிட்டாங்களே என்று கடுப்பாக திரும்ப நேரிட்டது.
பஸ் இல்லை.. தவித்துப் போன மக்கள்
சென்னை உள்பட அனைத்து ஊர்களிலுமே மாலைக்கு மேல் வெளியூர்ப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் நிலையங்களில் முடங்க நேரிட்டது. வெளியில் போய் ஏதாவது சாப்பிடலாம் என்றால் ஒரு டீக்கடை கூட இல்லை. பந்த் நடப்பது போன்ற நிலை நேற்று மாலைக்கு மேல் காணப்பட்டது.
ஆட்டோக்கள் கூட இல்லை
சாலைகளில் ஆட்டோக்கைக் காண முடியவில்லை. இதனால் பல பகுதிகளில் இரவில் வீடு திரும்ப முடியாமல் பலர் பெரும் தவிப்புக்குள்ளாகினர். பிள்ளைகளை, மகள்களை, கணவர்களை, மனைவியரை வேலைக்கும், பிற பணிகளுக்கும் வெளியில் அனுப்பி விட்டு வீட்டில் உள்ளோர் பட்ட துன்பமும், தவிப்பும் சொல்லி மாளாது.
சாலைகளில் அதிமுகவினர் உலா
கையில் கட்டைகளோ ஆயுதங்களோ இல்லை.. ஆனால் நேற்று முழுவதும் இரவு வரை அதிமுகவினர் சாலைகளில் போன விதமே அச்சுறுத்தலாக இருந்தது.
அனுதாப்பட்ட மக்கள்
உண்மையில் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு மக்களிடையே நேற்று பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை. ஆனால் அதிமுகவினரின் ரியாக்ஷன் அதை சற்று அதிருப்தி அலையாக மாற்றி விட்டது.
அமைதி காத்தால் நல்லது...
அதிமுகவினர் அமைதி காத்து இதுவரை செயல்பட்டதை விட இன்னும் ஒழுங்கான முறையில், ஆட்சியில் கவனம் செலுத்தினால், சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தினால் நிச்சயம் அடுத்த தேர்தலில் ஏதாவது எதிர்பார்க்கலாம். இல்லாமல், தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டால், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டால், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு இவர்களே முற்றுப் புள்ளி வைத்தது போலாகி விடும்.
நல்லவேளை தர்மபுரி பஸ் எரிப்பு போல எந்த விபரீதமும் நடக்கவில்லை என்ற அளவில் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு வீட்டுக் கொண்டனர்....எந்தக் கட்சி்த் தலைவரைக் கைது செய்தாலும் இப்படி வன்முறையில் ஈடுபடுகிறார்களே.. இது நமது சாபக்கேடு என்று மக்கள் காரி உமிழந்ததையும் கேட்க முடிந்தது.. பார்க்க முடிந்தது.!