தொடரும் வெளிநடப்பு போர்: முதல்வருக்கு எதிர்ப்பா? எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க எதிர்ப்பா?
சட்டசபையில் ஆளும் கட்சி, அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்களும்கூட வெளிநடப்பு செய்வதை பார்க்கும் போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க எதிர்ப்பு தெரிவிப்பது போல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை: சட்டசபையில் வழக்கத்துக்கு மாறாக ஆளும் கட்சி எம்எல்ஏ-வும், கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்களும் வெளிநடப்பு செய்வதை பார்த்தால் முதல்வருக்கு எதிர்ப்பா? இல்லை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க எதிர்ப்பா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதைத் தொடர்ந்து சசிகலா பதவி வெறியாட்டம் போட்டு சிறைக்கு சென்றதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் அவரது அக்கா மகன் டிடிவி தினகரன்.
இந்நிலையில் சசியால் துணை பொதுச் செயலாளராக்கப்பட்ட தினகரன், சசிகலா வருவதற்குள் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்ய முயன்றார். அதன் எதிரொலியாக ஆட்சியில் எடப்பாடியின் நிழலாக பின் தொடர்ந்தார்.
அதிமுக இணைப்பு
இதனிடையே இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற இரு அணிகளும் ஒன்றிணைவது என்று முடிவு செய்யப்பட்டது. ஓபிஎஸ் நிபந்தனையின்படி, சசிகலாவு்ம, தினகரனும் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர். இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறைவாசத்துக்கு பின்னர் சென்னை வந்தடைந்தார்.
உஷாரான எடப்பாடி
தன்னை கட்சியிலிருந்து நீக்கும் உரிமை பொதுச் செயலாளருக்கே உண்டு என்று தினகரன் வசனம் பேசினார். இதனால் எடப்பாடி உஷார் நடவடிக்கையாக, கட்சியிலிருந்து தினகரனை ஒதுக்கி வைத்ததாக கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி முந்திக் கொண்டனர். அதன்படி அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தினகரனுக்கு ஆதரவு
இந்நிலையில் தினகரனை எடப்பாடி அணியை சேர்ந்த 35 எம்எல்ஏ-க்கள் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கட்சி தினகரனுக்கு என்றும் ஆட்சி எடப்பாடிக்கு என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடியிடம் சமரசம் பேசினர். எனினும் எடப்பாடி சமாதானம் ஆகவில்லை என்று தெரிகிறது.
குடைச்சல் கொடுக்கும் டிடிவி
எவ்வகையிலாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுத்து கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தினகரன் கங்கணம் கட்டிக் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறார். அதன்படி நேற்று சட்டசபையில் சுகாதாரத் துறை குறித்த கேள்விக்கு அனுமதி அளிக்க மறுத்ததாக கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் வெளிநடப்பு செய்தார். சட்டசபை வரலாற்றில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு செய்தது இது முதல்முறை. இதனால் எடப்பாடி ஆடி போய்விட்டார்.
இன்று கூட்டணி கட்சிகள்
இந்நிலையில் சட்டசபையில் மாட்டிறைச்சி தடையை நீக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் முதல்வர் அளித்த பதில் திருப்தி அளிக்க வில்லை என்று கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அப்போது தினகரன் ஆதரவாளரும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுமான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து அவமானம்
இவர்கள் செய்வதை பார்த்தால் முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பா இல்லை எடப்பாடி முதல்வராக இருக்க எதிர்ப்பா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தினகரனின் கேம் ஸ்டார்ட் என்பதை போல, கட்சி தன் கைக்குள் வரும் வரை எடப்பாடி இன்னும் எத்தனை அவமானங்களை சந்திக்க நேரிடுமோ என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஜெயலலிதா இருந்திருந்தால்
ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா. அவர் கண் பார்வைக்கே ஆடிப்போகிறவர்களெல்லாம் இன்று வெளிநடப்பு செய்யும் நிலைக்கு சென்றுவிட்டனரே என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.