சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. முதல்வர் ஆகிறாரா சசிகலா?
ஒரு வார கால இடைவெளியில் மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று கூடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் முதல் முறையாக கடந்த மாதம் 27-ந் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார்.
தற்போது 2-வது முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மீண்டும் கூட்டியுள்ளார்.
மேலும், ஊருக்குச் செல்ல இருந்த உறுப்பினர்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஊருக்குச் சென்றவர்களையும் உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் மீண்டும் ஒரு வார இடைவெளியில் மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சசிகலா கூட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
பிப்ரவரி 8 அல்லது 9 ந் தேதிகளில் தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.