ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்திற்கு பதிலடி.... மக்களிடம் குறை கேட்ட கரூர் எம்.பி மு.தம்பித்துரை
கரூர்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறை கேட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அதிமுக, அமைச்சர்கள், எம்.பிக்கள் குறை கேட்பார்களா? என்று கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலடி தரும் வகையில், அதிமுகவினர் இப்போது மக்களை சந்தித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் லோக்சபா உறுப்பினரும், லோக்சபா துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரை, கரூரில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
முன்னாள் மாஜி மாவட்ட செயலாளரும், மாஜி அமைச்சருமான செந்தில் பாலாஜியை சமீபத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க கட்சி களை கட்டியுள்ளது.
இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை தற்போது புற்றுயிர் பெற்றது போலவும், தொகுதியைச் சுற்றி வருகிறார். கட்சியின் ஓவ்வொரு செயலலிலும் அக்கறை காட்டியுள்ளார். அதன்படி அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், அரசு கூட்டங்கள், பொதுமக்களின் நலன் காக்கும் சேவைகள் என அடுக்கு அடுக்கான சேவைகளில்
எந்த வித விளம்பரமும் இல்லாமல் ஈடுபடுத்தி வருகிறார்.
குறை உள்ளதா?
இந்நிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட 33, 34 வது வார்டுகளான பசுபதிபாளையம், வடக்குத்தெரு, தொழிற்பேட்டை, சணப்பிரட்டி,
எஸ்.வெள்ளாளபட்டி, ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு வசிக்கும் மக்களிடையே தேவைகள் என்ன என கேட்டறிந்தார்.
குடிநீர் வருகிறதா?
குடிநீர் வருகிறதா ?. சாக்கடை வசதி உள்ளதா, சாலை வசதி. தெருவிளக்கு ஆகியவை களைப் பற்றி கேட்டறிந்தார் தம்பித்துறை. பின்பு இந்நிகழ்ச்சியை முடித்த கையோடு அ.தி.மு.க அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அவர் விநியோகித்ததோடு, புதிய மாவட்ட செயலாளரான விஜயபாஸ்கரையும் பொதுமக்களை எப்படி பார்ப்பது, எப்படி அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது என கற்றுக் கொடுத்தது போல இந்நிகழ்ச்சி அமைந்தது.
எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
இந்த ஆய்வின் போதும், துண்டு பிரசுரங்கள் கொடுக்கும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், கரூர் மாவட்ட
அ.தி.மு.க செயலாளர் விஜயபாஸ்கர், கரூர் நகர செயலாளரும், நகர்மன்ற குழு உறுப்பினருமான வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சாதனை பிரசுரங்கள்
இந்த திடீரென நடத்தப்பட்ட இந்த ஆய்வு கரூர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க கட்சி நிகழ்ச்சியில் திடீரென துண்டு பிரசுரங்கள் கொடுத்த நிகழ்ச்சி கட்சியினரிடையே கூட பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் வருதுல்ல
மேலும் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து புதிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் மூத்த நிர்வாகிகளை இல்லம் தோறும் சந்தித்து வாழ்த்து பெற்று வருவதோடு, கட்சி பணிகளில் தனி ஆர்வம் செலுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எது எப்படியோ கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தி.மு.க கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க வை தனி புத்துணர்ச்சி பெற செய்த ஜெயலலிதாவிற்கு நன்றி என மற்ற உண்மையான அ.தி.மு.க வினர் கருதுகின்றனர்.