தமிழகத்தில் கொங்கு மண்டலம்தான் இருக்கா? எங்களை புறக்கணித்தால்... எடப்பாடியை மிரட்டிய எம்.எல்.ஏக்கள்
சென்னை: தமிழகத்தில் கொங்கு மண்டலம்தான் இருக்கிறதா? எங்களை புறக்கணித்தால் விளைவுகள் வேற மாதிரியாக இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்த எம்.எல்.ஏக்கள் மிரட்டியதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நாள் குறிக்கும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். சட்டசபையைக் கூட்டும்போது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் கோரிக்கை வெடிக்கும் என்பதால் அமைதியாக இருக்கிறார் பழனிசாமி.
சிறைக்குச் செல்லும்போது சசிகலா கொடுத்த வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்ற மறுக்கின்றனர் எனக் கொந்தளிக்கின்றனர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள். சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் கடந்த வாரத்தில் ரகசியக் கூட்டம் போட்ட எம்.எல்.ஏக்கள் தோப்பு வெங்கடாச்சலம், செந்தில்பாலாஜி, பழனிப்பன் உள்ளிட்டோர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்திக்கவும் கிளம்பிச் சென்றனர்.

அமைச்சர்கள் மூலம் பேச்சு
தமக்கு எதிராக நேரிடையாகவே போர்க்கொடி உயர்த்தப்படுவதால் நிதி அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மூலமாக அதிருப்தி கோஷ்டியுடன் பேச்சுவார்த்தையை நடத்தினார் முதல்வர் எடப்பாடியார். அமைச்சர் பதவியை எதிர்பார்த்து அவர்கள் காத்திருப்பதால், சட்டசபையைக் கூட்டும்போது அமைச்சரவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

ஆட்சி நீடிக்காது
இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆட்சி நீடிப்பது சிரமம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று எம்.எல்.ஏக்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரி, தென்னரசு, இன்பதுரை உள்ளிட்ட 10 பேர் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளனர்.

என்னதான் நடந்தது?
இதுகுறித்து நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் செய்தியாளரிடம் பேசிய அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவர், செங்கோட்டையனை கடந்த பத்து ஆண்டுகளாகவே ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார். சட்டசபையிலும் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்திருப்பார். அவர் மீது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். அவர் செய்த தவறுக்காக இறுதிவரையில் ஜெயலலிதா அவரை மன்னிக்கவே இல்லை.

ஒதுங்கும் எடப்பாடி
அவரைப் பதவியில் அமர வைத்தார் சசிகலா. சீனியருக்குப் பதவி கொடுத்திருக்கிறார்கள் என நாங்களும் அமைதியாக இருந்தோம். இப்போது பார்த்தால் ஆட்சி அதிகாரத்தில் நிழல் முதல்வர் போலவே செங்கோட்டையன் வலம் வருகிறார். எந்தப் பிரச்னை என்றாலும் அவர்தான் முன்னின்று தீர்க்கிறார். எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் எடப்பாடி.

ஜாதி பிரதிநிதித்துவம் இல்லை
மிகக் குறைவான மக்கள் தொகை கொண்ட சாதிகளைச் சேர்ந்த பலர் அமைச்சர்களாக இருக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் அதிகப்படியான அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாடார்களுக்கும் அகமுடையார்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. இவர்களைப் புறக்கணித்தால், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பாதிப்பு ஏற்படும் என உளவுத்துறை அறிக்கையே கொடுத்துள்ளது. ஆனாலும், எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி.

வேலையே நடப்பது இல்லை
'எம்.எல்.ஏக்கள் என்ன கேட்டாலும் செய்து தரப்படும்' என தினகரன் உறுதியளித்தார். ஆனால், எதாவது ஒரு வேலை நடக்க வேண்டும் என அமைச்சர்கள் அறைக்குப் போனால், மனுவை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். எந்த வேலையையும் செய்து தருவதில்லை. ' நாளைக்கு வாங்க' என்று சொல்லியே அலைக்கழிக்கின்றனர். அமைச்சர் அறைகளில் பி.ஏக்களின் ராஜ்ஜியம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. எம்.எல்.ஏ என்ற மரியாதையைக்கூடத் தருவதில்லை. நாங்கள் விட்டுக் கொடுத்துப் போவதால்தான் இந்த அமைச்சர் பதவி நிலைத்திருக்கிறது என்பதை உணர மறுக்கின்றனர்.

கொங்கு கோஷ்டி
எந்த இடத்தில் பார்த்தாலும், கொங்கு மண்டல கூட்டம்தான் கூடிக்கூடிப் பேசுகிறது. தமிழ்நாட்டில் கொங்கு மாவட்டம் மட்டும்தான் இருக்கிறதா? இனியும் எங்களைப் புறக்கணித்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்பதை எடப்பாடியிடம் கூறிவிட்டு வந்திருக்கிறோம். 'இனி அப்படி நடக்காது' என உறுதியளித்திருக்கிறார். அவர் கூறியபடி எதுவும் நடக்கவில்லையென்றால், விவகாரம் வேறு வடிவில் வெடிக்கும் என்றார் கொதிப்புடன்.












Click it and Unblock the Notifications