ஜெ. மறைந்து 1 மாதம் ஓடியது.. கண்ணீரில் தொண்டர்கள்.. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வேலைகளில் பிசி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவரது தொண்டர்கள் மறக்கவில்லை. கண்ணீருடன் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரால் பயனடைய பலரும் அவரை மறந்து விட்டதாகவே தெரிகிறது.
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலையில் இதயமுடக்கம் ஏற்பட்டது. அவரது உடல் கவலைக்கிடமானதை அடுத்து சிகிச்சையும் தீவிரமானது. எனினும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்ததாக அறிவித்தனர்.
ஜெயலலிதா மரணமடைந்து இன்றோடு ஒரு மாதம் முடிந்து விட்டது. அதிமுக தொண்டர்களால் ஜெயலலிதாவை அத்தனை எளிதாக மறக்க முடியாது. எனவேதான் தினசரியும் அவரது நினைவிடத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் சாரை சாரையாக வந்து மலர்களை தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.
எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடம் அருகே பூக்கள் விற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் தொண்டர்களின் தேவைக்கு ஏற்ப பூக்களை கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் மலர்களை விற்பனை செய்பவர்கள்.

11ஆம் நாளுடன் முடிந்தது
ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்டத்தில் 11ஆம் நாள் காரியம் கடந்த டிசம்பர் 15ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக படையல் போட்டு அன்னதானம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

மறக்காத தொண்டர்கள்
ஜெயலலிதாவின் மறைவினால் கண்ணீர் சிந்தும் தொண்டர்கள் நேராக அவரது நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தைக் காண வருகின்றனர். கோவிலுக்கு போவது போல தொட்டு வணங்கி விட்டே செல்கின்றனர் தொண்டர்கள்.

பொதுச்செயலாளர்
ஜெயலலிதா மறைந்து 30 நாட்கள் முடியும் முன்பாகவே பொதுச்செயலாளராக பதவியேற்று ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர்ந்தார் சசிகலா. இது பெண் தொண்டர்களை கொதிப்படைய வைத்தது.

கேக் வெட்டினாரா சசிகலா
புத்தாண்டு தினத்தன்று போயஸ் தோட்டத்தில் சசிகலா கேக் வெட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது கேக் வெட்டியவர்களுக்கு அதை சாப்பிட்டவர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.

ஒரு மாதம் முடிந்தது
ஜெயலலிதா மரணமடைந்து ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் போயஸ் தோட்ட இல்லத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதாவது 3ஆம் தேதியே ஜெயலலிதாவின் மிகப்பெரிய படம் திறக்கப்பட்டது. ஒருவேளை ஜெயலலிதா 4ஆம் தேதியே மரணமடைந்து விட்டாரா? எப்போது மரணமடைந்தார் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்குவார்களா என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

மர்மம் விலகுவது எப்போது
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் எந்த மர்மமும் இல்லை என்று அமைச்சர்களும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட சில தலைவர்களும் கூறி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும், தொண்டர்களின் மனம் நிம்மதியடையும்.












Click it and Unblock the Notifications