14 ஆண்டுகளாக கிடைக்காத நிவாரணம்... கும்பகோணம் தீ விபத்துக்கு ரஜினி, கமல் அறிவித்த நிதி எங்கே?
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரஜினியும், கமலும் அறிவித்த நிதி 14 ஆண்டுகளாகியும் தங்களை வந்து சேரவில்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் : கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நடிகர்கள் ரஜினியும், கமலும் அறிவித்த நிதி எங்கே என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த பயங்கர தீ விபத்து. ஆடிப்பாடி விளையாடி பல கனவுகளோடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 94 பிஞ்சுகள் தீக்கு இரையாகின.
குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு குடியரசுத் தலைவர் முதல் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா வரை கும்பகோணம் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.
ரஜினி, கமல் நிவாரண உதவி
இதே போன்று பல்வேறு அரசியல் கட்சியினரும், நடிகர்களும் குழந்தைகளின் பெற்றோருக்கு நிவாரண உதவி அறிவித்தனர். நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் தலா ரூ. 12 லட்சம் நிதியுதவி அறிவித்தனர்.
உறுதியளித்த சரத்குமார்
அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார் கும்பகோணத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் சங்கம் சார்பில் ரூ. 60 லட்சம் வசூலாகியுள்ளதாக கூறினார். ரூ. 1 கோடியை எட்டியவுடன் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
கிடைக்காத நிதியுதவி
ஆனால் கும்பகோணம் தீ விபத்து சம்பவம் நடந்து முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில், இதுவரை ரஜினி, கமல் அறிவித்த நிவாரண உதவி பெற்றோருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தெளிவுபடுத்தாத நடிகர் சங்கம்
ரஜினியும், கமலும் நிவாரண நிதியை நடிகர் சங்கத்திடம் கொடுத்தார்களா இல்லை என்பதில் தெளிவு கிடைக்கவில்லை. அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர் சங்க வரவு செலவு கணக்கை பார்த்தால் தெரியும் என்கிறார், இப்போதைய துணைத் தலைவர் பொன்வண்ணனோ முன்னணி நடிகர்கள் கணம் தந்ததாக முந்தைய நிர்வாகம் சொல்லிருக்கலாம். ஆனால் நிதி தருவதாக சொன்னவர்கள் சிலரிடமிருந்து பணம் வரவில்லை என்று நாங்கள் பொறுப்புக்கு வந்தபிறகு தெரிந்து கொண்டோம். பணத்தை வசூலித்து வைத்துக் கொண்டு அதைச் சங்கம் செலவு செய்யவில்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
ரஜினி, கமல் கவனத்தில் கொள்வார்களா?
ஆக சொன்னபடி ரஜினி, கமல் நிதியை கொடுத்தார்களா. அல்லது நடிகர் சங்கம் பணத்தை வசூலித்து வைத்துக் கொண்டு இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல் இருக்கிறதா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியல் வாழ்க்கைக்கு வந்துள்ள நடிகர்கள் கமலும், ரஜினியும் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வார்களா?