32 ஆண்டுகளுக்குப் பின் நிதி அமைச்சர் கையில் தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சி நிர்வாகம் நிதி அமைச்சர் கைக்கு வந்த வரலாறு திரும்பியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
இதனால் ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர்
இதற்கு முன்னர் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது 1984-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, மருத்துவமனையில் இருந்தபடியே அவர் ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்பட்டது.
ஆளுநர் குரானா
பின்னர் அக்டோபர் 13-ந் தேதிக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் உடல் நிலை மோசமானபோது, அப்போது ஆளுநராக இருந்த எஸ்.எல். குரானா, அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
நெடுஞ்செழியன்
பின்னர் அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் வசம் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்த 14 துறைகள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் நெடுஞ்செழியன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு அரசை வழிநடத்துவதற்காக அமைக்கப்பட்டது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையை நெடுஞ்செழியன் கலைத்தார். இதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வென்று முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்றார்.
32 ஆண்டுக்குப் பின்...
தற்போது 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வசம் தமிழக ஆட்சி நிர்வாகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.