ஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு- ஜல்லிக்கட்டுக்காக மதுரையிலும் இளைஞர்கள் எழுச்சி
பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி மதுரையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கேற்றுள்ளனர்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி இன்று மதுரையில் மிகப்பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக்கோரி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த 2014ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது.
கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் ஜனவரி14ம் தேதி அந்த அறிவிப்பை தடை செய்தது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் கறுப்பு பொங்கலாக அனுஷ்டித்தனர். அதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
பொங்கல் பண்டிகை
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையில் பேரணி
சென்னை மெரினா கடற்கரை அருகே ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஞாயிறன்று பிரம்மாண்ட பேரணி நடந்தது. மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்கக்கோரியும் உழைப்பாளர் சிலை வரை பேரணியாக சென்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் பேரணியில் கலந்துகொண்டனர். காளைகளை கையில் பிடித்து சென்ற அவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
மதுரையில் ஜல்லிக்கட்டு
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரையிலும் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு நடத்துவதுதொடர்பாக பேனர்கள், பதாகைகளை பிடித்தபடி இளைஞர்கள் நடந்துசென்றனர்.
ஏறுதழுவுதல்
பேரணியில் பங்கேற்றவர்கள் ஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு என்று முழக்கமிட்டனர். சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைந்து இந்த பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர் இளைஞர்கள். தமிழக இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு செவி சாய்க்குமா?