சசிகலா குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள்- கவலையில் உறவினர்கள்!
சசிகலா குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்திருப்பதால் உறவினர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்து போயுள்ளனராம்.
தஞ்சாவூர்: சசிகலா குடும்பத்தில் மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்திருப்பதால் மன்னார்குடி உறவினர்கள் பெரும் கவலையடைந்துள்ளனராம்.
சசிகலா அண்ணியின் மரண நிகழ்வில் மகிழ்ச்சியோடு கை குலுக்கிக் கொண்டார்கள் தினகரனும் திவாகரனும். குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்று திரண்டுவிட்டனர். இனி எடப்பாடிக்கு சிக்கல்தான் என்ற ரீதியில் செய்தியில் பரவுகின்றன.
உண்மையில், அடுத்தடுத்த மரணங்களால் சசிகலாவின் உறவினர்கள் கவலையில் உள்ளனராம். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தான லட்சுமி, நீண்டநாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் நேற்று சந்தானலட்சுமி காலமானார்.
சுந்தரவதனம்
சுந்தரவதனமும் கூட நடக்க முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவர் சென்னையில் தான் இருக்கிறாராம்.
மகாதேவன்
ஓரிரு மாதங்களுக்கு முன்னால் சசிகலா அக்கா மகன் மகாதேவன் மரணம் அடைந்தார். இவர் மீது சசிகலா மிகுந்த பாசம் வைத்திருந்தார். அந்தக் குடும்பத்திலேயே பணத்தின் மீது பெரிதாக ஆசை காட்டாமல், தொண்டர்களிடையே தனக்கு என செல்வாக்கை உருவாக்கி வைத்திருந்தவர் மகாதேவன்.
சசியால் ஜீரணிக்க முடியவில்லை
அவரது மரணத்துக்கும் சசிகலாவால் வர முடியவில்லை. மகாதேவனுக்கு அடுத்தபடியாக, அண்ணி சந்தானலட்சுமி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் சசிகலா. அவரும் மரணத்தைத் தழுவியதை சசிகலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஜோதிடர்களுடன் ஆலோசனை
சசிகலா சிறையில் உள்ள இந்தக் காலகட்டத்தில், தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் மரணிப்பதால் பெரும் கவலை அடைந்தனர். இது தொடர்பாக ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தியதில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால்தான் கடந்த சில நாட்களாக சசிகலா குடும்பத்தினர் பரிகாரங்களில் தீவிரமாக உள்ளனராம்.