ஆரம்பமாகும் "திஹார் கொண்டான்" தினகரன் ஆட்டம்...கலக்கத்தில் கொங்கு அமைச்சர்கள்!
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சிப் பணியை தொடர்வேன் என்று கூறியுள்ளதால் கொங்கு மண்டல அமைச்சர்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை: சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த டிடிவி. தினகரன் கட்சிப் பணியை தொடர்வேன் என்று சொல்லியுள்ளதால் அவர் இல்லாத காலத்தில் ஆட்சி, அதிகாரத்தில் கோலோச்சிய கொங்கு மண்டல அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது பெற்று கட்சியினர் மத்தியில் செல்வாக்கை பெற்றுவிடலாம் என்று நினைத்த டிடிவி தினகரன் கடைசியில் ஜெயிலுக்குப் போய் ஜாமீனில் திரும்பியுள்ளார். கட்சியும் ஆட்சியும் முக்கியம் என்று சொன்ன "சித்தி"யின் வார்த்தைக்காக கட்சி இருந்து ஒதுங்குவதாக கூறி விட்டு தற்போது மீண்டும் வந்து விட்டார்.
'இப்பகல் செய்யின் இப்போதே விளையும்' என்று புதுமொழிக்கு ஏற்ப அரசியலில் உடனே அரியணை ஏறும் ஆசையால் சிக்கலில் மாட்டி, 41 நாட்களுக்குப் பிறகு டெல்லி திஹாரில் ஒன், டூ, த்ரி எண்ணி விட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார் தினகரன். ஆனால் தினகரன் சிறையில் இருக்கும் போது இங்கே அவரது விசுவாசிகள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி கூவியது போல வெளிவந்தததுமே "நான் கட்சியில் தான் இருக்கிறேன் மீண்டும் கட்சிப் பணி தொடர்வேனான்னு கேட்காதீங்கன்னு" பலரோட வயித்துல புளியைக் கரைத்துள்ளார்.
க(ல)ழக அமைச்சர்கள்
இதில் முக்கியமாக கிளியில் இருப்பது கொங்கு மண்டல அமைச்சர்கள் தான் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தினகரன் சிறை செல்லும் முன்னர் முதன்முதலில் தினகரனை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த இடமே அமைச்சர் தங்கமணியின் வீடு தான். இதனால் தினகரன் வீட்டிலேயே உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி என்று இருவரையும் அழைத்து பேசிய போது கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாம்.
ஆட்டி படைத்த அமைச்சர்கள்
ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் டெல்லிக்கு விசாரணைக்குப் போன தினகரன் அப்படியே சிறைக்குள் தள்ளப்பட்டுவிட்டார். தினகரன் இல்லாத இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி முதல்வர் பழனிசாமி கையில் இருந்தாலும் அதிகாரம் தங்கமணி, வேலுமணி இவர்கள் கையில் தான் இருந்தது என்பதை பலரும் கவனிக்கத் தவறவில்லை.
பாஜகவுடன் இணக்கம்
குறிப்பாக சென்னை மாநகர ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டதில் இரண்டு மணியான அமைச்சர்களின் அழுத்தம் தான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இதே போன்று டெல்லியில் அமைச்சர் நிதின் கட்கரியை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சந்தித்தது. அடுத்தடுத்து இரண்டு முறை தனிப்பட்ட முறையில் அமைச்சர் தங்கமணி பிரதமர் மோடியை சந்தித்தது என்று மத்திய அரசுடன் இணக்கமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது இவர்கள் தான் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
துதி பாடிகள்
இதே போன்று கடைசியாக கடந்த 24ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த போதும் அவருடன் அமைச்சர் தங்கமணி இருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதிலிருந்தே மத்திய அரசின் துதி பாடிகளாக வேலுமணியும், தங்கமணியும் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.
ரெடியாகுது வேட்டு
முறையான ஆதாரங்களை டெல்லி போலீசார் தாக்கல் செய்யாததை காரணம் காட்டியே இப்போது தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஜாமினில் வெளிவந்துள்ளனர். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை எந்த அதிரடி அரசியலிலும் தினகரன் இறங்கமாட்டார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியின் அமைச்சர் பதவிக்கு எத்தனை நாட்களில் வேட்டு என்பது தான் தினகரன் விசுவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.