அரசியல் குறித்து தான் அறிவிப்பேன்.. வருவேன் என சொல்லவில்லை: ரஜினியின் சஸ்பென்ஸ்
அரசியல் நிலைப்பாடு குறித்து 31ம் தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நிச்சயம் 31ம் தேதி அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்து உள்ளார். அதிலும் வழக்கம் போல ரஜினி தனது ஸ்டைலில் ஒரு சஸ்பென்ஸ் வைத்தே சொல்லி இருக்கிறார்.
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பு இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த முறை ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவது நிச்சயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர்கள் கலைஞானம், மகேந்திரன் ஆகியோர் பேசியதற்கு பிறகு மைக் பிடித்த ரஜினி, என்னை வாழவைத்த, வாழ வைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. பிறந்தநாளில் உங்களை சந்திக்க முடியாமல் போனதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்று பேச்சை ஆரம்பித்தார்.
என்னுடைய அரசியல் எதிர்பார்ப்பை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களும் அதை மிகவும் எதிர்பார்க்கிறார்கள். நான் அரசியலில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். அதனால் தான் அங்கு வருவது குறித்த யோசனை நிறைய இருக்கிறது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்தால் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் அதற்கு வியூகங்கள் வகுக்க வேண்டும். அதனால் தான் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டேன். என்னுடைய அரசியல் குறித்து 31ம் தேதி அறிவிக்க உள்ளேன் என்றார்.
இதைக்கேட்டதும், ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். கைதட்டல் அடங்க நீண்டி நேரம் ஆன நிலையில், நான் என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க போவதாகவே சொன்னேன் . நிச்சயம் வருவேன் என்று சொல்லவில்லையே அதனால், 31ம் தேதி வரை காத்து இருங்கள்.
அதை எல்லாம் விட உங்களுக்கு முக்கிய வேலைகள் இருக்கின்றது. வீடு,தாய், மனைவிகளை நன்கு கவனித்து கொள்ளுங்கள். அதுபோல, குழந்தைகளை படிக்க வையுங்கள் என்று ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் சஸ்பென்ஸ் வைத்தார்.
ரஜினியின் இந்த சஸ்பென்ஸ் பேச்சால் ரசிகர்கள் யோசனையில் ஆழ்ந்து உள்ளனர். அரசியல் நிலைப்பாடு என்றால், தனிக்கட்சி ஆரம்பிப்பது அல்லது அதை அறிவித்துவிட்டு தள்ளி போடுவது, தமிழகத்தில் எதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பது அல்லது தேசிய கட்சியான பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது என எது வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் எதுவாக இருந்தாலும் அதை நிச்சயம் இந்த முறை அறிவிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.