சிறையில் 'சீக்ரெட்டாக' சசிகலாவுக்கு சிறப்பு சலுகை.. சித்தராமையாவிடம் தூதுபோன காங். முக்கிய புள்ளி!
சென்னை: சிறையில் சசிகலாவுக்கு ரகசியமாக சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தூது விடுக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்த விஷயங்கள் பெங்களூர் மத்திய சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ரெய்டில் நடந்த விவகாரங்கள் குறித்து, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஆளும்கட்சியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
டிடிவி தினகரன் பற்றி புகார்
சசிகலாவை சந்திக்கச் சென்ற குடும்ப உறவுகளும், ' நாம் எவ்வளவோ சொல்லியும் டி.டி.வி கேட்கவில்லை. இப்போது தேவையற்ற கெட்ட பெயரை உருவாக்கிவிட்டார். தேர்தல் ஆணையத்தையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. இனியாவது அவரை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்' எனத் தெரிவித்துள்ளனர்.
கெடுபிடி அதிகம்
டி.டி.வி பற்றிச் சொல்லப்படும் தகவல்களை மௌனமாக கேட்டுக் கொண்டாராம் சசிகலா. பெங்களூரு சிறையிலும் அவரைச் சந்திக்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததால், மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. சிறையில் விதிகளை மீறி அதிக நபர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது ஊடகங்கள் மூலம் அம்பலமானதால் இந்த கெடுபிடியாம்.
தூதுபோன காங். புள்ளி
இதனிடையே தமிழக காங்கிரஸ் புள்ளி ஒருவர் மூலம், கர்நாடக முதல்வர் சித்தராமையா தரப்பைத் தொடர்பு கொண்ட கார்டன் நிர்வாகிகள், ' சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுங்கள்' எனக் கேட்டுள்ளனர்.
வெளியே தெரிந்தால் அம்பேல்
அதற்குப் பதில் அளித்த கர்நாடக காங்கிரஸ் புள்ளிகள், ' அவருக்குக் கடுமையான எதிர்ப்பு உள்ளது. அவருக்கு எதிராக தினம்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. நாங்கள் உதவி செய்வது வெளியில் தெரிந்தால், அரசுக்குத் தேவையற்ற கெட்ட பெயரை உருவாக்கும்' என மறுத்துவிட்டனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர் கார்டன் நிர்வாகிகள்" என்கின்றனர் தலைமைக்கழக வட்டாரத்தில். அடுத்த வருடம் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெயரை கெடுத்துக்கொள்ள கர்நாடக அரசு விரும்பவில்லையாம்.