ஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன்.. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் அடடா போட்டி!
சென்னை: அதிமுக தலைமையில் பல அணிகள் செயல்படுவதை போல அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட, சசிகலாவை எதிர்த்து, ஒ பன்னீர்செல்வம் தனியாக வந்தவுடன் அவருக்கு ஆதரவு கரம் நீட்டியது சிங்கை ஜி ராமசந்திரன் தலைமையிலான தகவல் தொழில்நுட்பப் பிரிவினர்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப அணியினரோ பன்னீர்செல்வம் ஆதரவு செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். சசிகலாவை விமர்சனம் செய்தனர்.
கூவத்தூரில் சசிகலா தரப்பு, அதிமுக எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருந்தபோது, எம்எல்ஏக்களின் செல்போன் எண்களை சமூக வலைத்தளத்தில் எடுத்துப்போட்டு, தொகுதி மக்கள் அந்த எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு திருப்பி அழைக்க வலியுறுத்தியதில் ராமச்சந்திரன் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப குழுவிற்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்த பிரசாரத்திற்கு பெரும் வெற்றி கிடைத்தது. பொதுமக்கள் நெருக்கடி கொடுத்ததால், சில எம்எல்ஏக்கள், மனதை மாற்றி பன்னீர்செல்வம் அணிக்கு திரும்பினர்.
இன்று வரை, ஒ பன்னீர்செல்வத்திற்கு பக்க பலமாக ஐடி பிரிவு செயல்பட்டுவருகிறது.
பன்னீர்செல்வம் பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பங்கேற்போரின் தொலைபேசி நம்பர், பெயர் போன்றவற்றை வாங்குவது, மக்களுக்கு பன்னீர்செல்வம் பேச்சை நேரடியாக ஒளிபரப்புவது, தினமும் பல்லாயிரம் பேருக்கு வாட்ஸ்அப் தகவல் அனுப்புவது என துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்தவுடன் சிங்கை ஜி ராமசந்திரனை சசிகலா பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.
சசிகலா தரப்பு, ராஜ்சத்யன் என்பவரை தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக நியமித்துள்ளது. இப்போது அவர்கள் பன்னீர்செல்வத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பி வருகிறார்கள்.
இப்போது அதிமுகவின் இவ்விரு தகவல் தொழில்நுட்ப அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது குறித்து, பன்னீர் அணியைசேர்ந்த ஐடி பிரமுகர் டிவிட்டர் ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.
Paid media now gone to the hands of EPS and TTV to promote their social media team as the best.
— Hari Prabhakaran (@Hariadmk) June 25, 2017
Which IT wing u think is the best? #AIADMK
இந்த கணக்கெடுப்பில் 1232 நெட்டிசன்கள் வாக்களித்துள்ளனர். அதில், 72 சதவீதம் பேர் ஓ.பி.எஸ் அணியின் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சில ஊடகங்களில் சசிகலா அணி சிறப்பாக செயல்படுவதாக செய்தி வெளியான நிலையில் இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.