லோக்சபா தேர்தல்: மதுரையில் "முதல் முறையாக" வெற்றி கனி பறிக்குமா அதிமுக?
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல் அதிமுகவே போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மதுரை லோக்சபா தொகுதியானது மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மேலூர் ஆகிய சட்டசபை தொகுதிகளைக் கொண்டது. இதில் மதுரை மத்தி தொகுதியில் தேமுதிகவும் தெற்கு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளன.
இதர தொகுதிகள் அதிமுக வசம். இருப்பினும் தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துதான் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது. இதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் மதுரையின் பெரும்பான்மை வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. அதிமுகவின் ராஜன் செல்லப்பா மேயர் தேர்தலில் 1.74 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனால் லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகின்றனர். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே இதுவரை மதுரை தொகுதியில் அதிமுக வென்றதே இல்லை.
கூட்டணிக்கு ஒதுக்கப்படும் மதுரை
மதுரை தொகுதியை பொதுவாக கூட்டணி கட்சிக்கு அதிமுக ஒதுக்கிவிடுவது வழக்கம்.
சுப்புராமன் குடும்ப ஆதிக்கம்
1980, 84 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஏ.ஜி. சுப்புராமனும் அதன் பின்னர் 1989,91,96 தேர்தல்களில் ஏ.ஜி.எஸ். ராம்பாபுவும் மதுரை தொகுதி எம்.பியாக இருந்தனர்.
சு.சுவாமி
1998 தேர்தலில் ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி மதுரை தொகுதி எம்.பியானார்.
சிபிஎம்
மதுரை தொகுதியில் 1999,2004ஆம் ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மோகன் எம்.பியாக இருந்தார்.
அதிமுகவை வீழ்த்திய சிபிஎம்
2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் நேருக்கு நேர் மோதின. அதிமுகவை மார்க்சிஸ்ட் கட்சி வீழ்த்தியது.
மு.க. அழகிரி
2009ஆம் ஆண்டு தேர்தலில் மதுரை தொகுதியை முதல் முறையாக திமுக கைப்பற்றியது. அக்கட்சியின் மு.க. அழகிரி எம்.பியானார்.
அதிமுக வசமாகுமா?
மதுரை தொகுதியை 2009 தேர்தலில் முதல் முறையாக திமுக கைப்பற்றியது போல வரும் லோக்சபா தேர்தலில் முதல் முறையாக அதிமுகவும் கைப்பற்றும் வகையில் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுக்காமல் அதிமுகவே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அக்கட்சியினர் விருப்பம்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு?
40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என்றாலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு இடம் கிடைத்தால் மதுரை தொகுதியை கேட்டுப் பெற மார்க்சிஸ்ட் கட்சி முனைப்பு காட்டும் என்பதால் இப்போதே அதிமுக தலைமைக்கு தொண்டர்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.