ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: பெண் வேட்பாளரை களமிறக்குகிறது அ.தி.மு.க.?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி என்பதால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பெண் ஒருவர் அண்ணா தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்படக்கூடும் எனத் தெரிகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ஸ்ரீரங்கம். அவருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே தி.மு.க. வேட்பாளரான ஏற்கெனவே ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த என். ஆனந்த் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அண்ணா தி.மு.க.தான் முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவிக்கும். ஆனால் தற்போது தி.மு.க. அதிரடி காட்டியிருக்கிறது.
சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது என்றாலும் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி என்பதால் இந்த தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. இத் தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்தவும், அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவும் அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது
அண்ணா தி.மு.க. திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் டாக்டர் தமிழரசி, ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் லதா, மேயர் ஜெயா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சரும், ஏற்கனவே ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கே.கே. பாலசுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய தலைவர் எஸ்.பி.முத்துக்கருப்பன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அ.தி.மு.க. சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்றே கூறப்படுகிறது.